loading

கணினிகளஞ்சியப்பேரகராதி

பதிவுற்ற நாள் 09 Sep 2022 | அகராதிகள் கலைச் சொற்கள் கணினிகளஞ்சியப்பேரகராதி

“கணினிகளஞ்சியப்பேரகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/kanini_kalanjiya_perakarathi

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் கணினிகளஞ்சியப்பேரகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “கணினிகளஞ்சியப்பேரகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “கணினிகளஞ்சியப்பேரகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

Thanks to https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-1.pdf

Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/

வளர்தமிழ்ச் செல்வர்
மணவை முஸ்தபா
வெளியீடு
மணவை பப்ளிகேஷன்
ஏஇ 5 (103) அண்ணா நகர்,
சென்னை - 600 040.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை தொகுப்புத் துணைவர்கள்
மு. சிவலிங்கம்
இரா. நடராசன்
ராம்குமார்

முன்னுரை

ஒரு மொழியின் உண்மையான வளர்ச்சி, எந்த அளவுகோலைக் கொண்டு மொழியியல் வல்லதுர்கள் அளவிட்டுக் கணிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.
காப்பியம் முதலான மரபுக் கவிதை வடிவிலான இலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது புதுக்கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற நவீன புத்திலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது அம்மொழியில் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களின் பெருக்கத்தைக் கொண்டா?
இவை மட்டுமே மொழி வளர்ச்சியின் முழுமையான அளவு கோல்கள் ஆகா. ‘மொழியில் புதிது புதிதாக வந்து இணையும் சொல் வளத்தை, குறிப்பாக, கலைச்சொற்களின் பெருக்கத்தைக் கொண்டே ஒரு மொழியின் வளர்ச்சியின் அளவு கணிக்கப்படும்’ என்பதுதான் உலக மொழியியலார் தரும் முடிவு. இதிலிருந்து ‘சொல் வளமே ஒரு மொழியின் உண்மையான மொழி வளம்’ என்பது தெளிவாகிறது.
இன்றைய அறிவியல் வளர்ச்சிச் சூழலுகேற்ப, ஆயிரமாயிரம் கலைச்சொற்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொற்கள் தமிழில் உருவெடுக்க வேண்டியது காலத்தின் இன்றிய மையாக் கட்டாயமாகும் எனக் கூற வேண்டியதில்லை.
‘இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சி முழுக்க முழுக்க மேனாட்டவர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவற்றிற்கான அறிவியல் கலைச்சொற்களும் அவர்களாலேயே ஆங்கிலத்தில் படைக்கப்பட்டுள்ளன. அவை உலகினரால் ‘உலகப் பொதுமொழி’ போன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாமும் ஆங்கில வடிவில் அப்படியே ஏற்றுப் பயன் படுத்த வேண்டியதுதானே? தமிழில் எதற்குப் புதிதாகக் கலைச்சொற்கள்? வேண்டுமானால் விளக்கங்களைத் தமிழில் எழுதிக்கொள்ளலாம். முழுமையாகத் தமிழிலும் இதற்கான கலைச்
.

சொற்களை உருவாக்குவது வீண் வேலை அல்லவா? என்று கூறு வோரின் கூற்றில் ஒரளவு உண்மை இருப்பதுபோல் தோன்றினும் இக்கூற்று முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.
அறிவியல் - தொழில்நுட்பக் கலைச்சொற்களில் இருவேறு தன்மை உண்டு. முதலாவது சாதாரணமாகப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். மற்றொரு வகை அசாதாரணத் தன்மை களோடுகூடிய சிறப்புப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். இவை (International Technical Terms) எனப்படும். இவ்வகைக் கலைச்சொற்கள் உலக முழுவதிலும் மொழி பெயர்க்கப்படாமல் ஒலி பெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுவனவாகும். சான்றாக, லேசர் (Laser), ரேடார் (Radar) போன்ற முதலெழுத்துச் சொற்களும் என்சைம், ஐசோடோப், ஒசோன் போன்ற சொற்களும் மற்றும் அறிவியலார் பெயரில் அமைந்த ஆம்பியர், ஒம் போன்ற சொற்களும் பன்னாட்டுக் கலைச்சொற்களாகும்.
ஆங்கில மொழியும் அறிவியலும் நன்கு அறிந்தோரே இவற்றின் பொருள்நுட்பம் அறிவர். மற்றவர்கட்கு இச்சொற்கள் வெறும் குழுஉக்குறிகள் போன்றே தோன்றும்.
இஃதன்னியில் ‘டெலிவிஷன்’, ‘டெலஸ்கோப்’ போன்ற சொற்களும் உலகளாவிய முறையில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் அறிவோ அல்லது படிப்பறிவோ இல்லாதவர்கள் இச்சொற்களைக் குழுஉக்குறிச் சொற்களாகவே பயன்படுத்துகின்றனர். இந்த ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொற்களாக ‘தொலைக்காட்சி’, ‘தொலைநோக்கி’ எனத் தரும்போது தொலைவிலிருக்கும் காட்சிகளை அண்மையில் கொண்டு வந்து காட்டும் கருவியே ‘தொலைக்காட்சி’ என்றும் தொலைவிலிருப்பவைகளை நெருங்கிக் காண உதவும் கருவியே ‘தொலைநோக்கி’ என்றும் யாரும் விளக்காமலே தமிழ்க் கலைச்சொல் மூலம் பொருள் உணர்ந்து தெளிய முடிகிறது. இவ்வாறு ஆங்கிலம் அறியாத சாதாரண பாமர மக்களும் கேட்ட மாத்திரத்தில் தெளிவாகப் பொருள்புரியும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித்
.

தருவதால் ஏற்படும் இழப்பு எதுவுமில்லை. பயனோ ஏராளம், ஏராளம்!
எனவே, எழுத்தறிவின் உச்சத்தைப் பெறாத நம் மக்களிடையே அறிவியல் அறிவையும் உணர்வையும் அதிகரிக்க தாய்மொழியாம் தமிழ் மூலம் சொல்வதே சாலச்சிறந்ததாகும்.
அறிவியல் நுட்பங்களைத் திறம்பட விளக்கவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறதா என ஐயுருவோரும் இருக்கவே செய்கின்றனர். மொழியியல் பேரறிஞர் டாக்டர் கிரியர்சன் உள்ளத்தில் உருவெடுக்கும் சிந்தனைகளை மிக நுட்பமான உணர்வுகளை, எண்ணிய எண்ணியாங்கு, திறம்பட வெளிப்படுத்த வல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறது எனப் புகழ்ந்துரைத்த தற்கொப்ப எத்தகைய அறிவியல்நுட்பச் செய்தியாயினும் அவற்றைச் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் தமிழில் கலைச்சொல் வடிவில் சொல்ல முடிகிறது என்பதுதான் என் நாற்பதாண்டு காலக் கலைச் சொல்லாக்கப் பட்டறிவு உணர்த்தும் உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக, அறிவியலைத் திறம்பட உணர்த்துவதற்கான ஆற்றல்மிகு மொழியாக அமைந்திருப்பதுதான். இது நாமே அறிந்துணரா உண்மைநிலை.
தமிழ் மொழி வரலாற்றை, வரலாற்று வழி நுணுகி ஆராய்ந்தால், காலந்தொறும் தமிழ் பல்வேறு துறைக் கலைச் சொற்களை உருவாக்கி, வளர்ந்து வந்துள்ள வரலாறு தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.
‘காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஒருமொழி தன்னைத் தகைவமைத்துக் கொள்வதன்மூலமே வளர்ச்சியும் வளமும் பெறமுடியும்’ என்பது மொழியியல் வரலாறு. அவ்வகையில் சமயத்தாக்கம் ஏதுமில்லாத சங்க காலத்தில் அறிவியல் அடிப்படையில் சமுதாயப்பூர்வமாக அகம், புறம் என வளர்ந்த தமிழ், வைதீக சமய, சமண, பெளத்த, கிருத்துவ, இஸ்லாமியத் தமிழாக, தத்துவம் சார்ந்த சித்தாந்தத் தமிழாக வளர வேண்டிய தவிர்க்கவியலா சூழல். ஆங்கிலேயர் உறவால் அறிவியல் அடிப்-
.

படையிலும் புதினம், சிறுகதை என்ற புத்திலக்கியப் போக்கிலும் வளர வேண்டிய சூழ்நிலை. இக்கால கட்டங்களிலெல்லாம் புதிய கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த புதிய புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டு வளர, வளமடையத் தவறவில்லை. ஆனால், தயக்கமெல்லாம் தமிழர்களிடம்தான். தொய்வு மனப்பான்மை படைத்த சிலர் தங்களால் இயலாது என்பதை வெளிப்படுத்த விரும்பாது. அஃது தமிழாலேயே இயலாது என விளம்ப முற்பட்டு விடுகின்றனர்.
மருத்துவத் துறைக்கான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் காணும் முயற்சி நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்பே தொடங்கிவிட்டதெனலாம். அம்முயற்சிக்கு வடிவம் தந்தவர் ஈழத்தில் மருத்துவம் பயிற்று விக்க வந்த, யாழ்ப்பான மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஃபிஷ்கிரீன் என்ற அமெரிக்கர். அவர் தமிழில் உருவாக்கிய கலைச்சொற்கள் தமிழ்ப் பெயர் தாங்கியிருந்தபோதிலும் பெரும்பான்மையான கலைச்சொற்கள் சமஸ்கிருத ஒலி வடிவினவாகும். இதற்குக் காரணம் இக்காலகட்டத்தில் அங்கு உச்சத்தில் இருந்த இந்து சமயத் தாக்கமும் அதன் புனித மொழி என்ற போர்வையில் தமிழ் மீது செலுத்தி வந்த ஆதிக்கப் போக்குமாகும். இந்நிலையே இங்கும் நிலவியபோதிலும் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு தமிழிலேயே கலைச் சொல்லாக்க முயற்சிகள் வலுப்பெறலாயின.
அன்றைய சமஸ்கிருதச் செல்வாக்கு தமிழ்க் கலைச் சொல்லாக்கத்துக்கு ஏதோ ஒருவகையில் முட்டுக்கட்டையாக அமைந்தது போன்றே, இன்று ‘தூய தமிழ்’ ஆர்வலர்களின் தனித் தமிழ்ப் போக்கும் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப் படுத்தாமலிருக்க முடியவில்லை. இலக்கியத்தில் மொழி முதன்மை நிலை பெறலாம். அறிவியல் கலைச்சொற்களைப் பொறுத்தவரை மொழியைக்காட்டிலும் கருத்துணர்த்தும் திறனுக்கே முதலிடம். சொல்வழி கருத்தை வெளிப்படுத்த உதவும் துணைக்கருவி மட்டுமே மொழி என்பதை நாம் உணர்ந்து தெளியவேண்டும். அறிவியலில் மொழிக்கு முதன்மைதர முற்பட்டால் கருத்துச்சிதைவும் பொருட்பிறழ்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளில் காண முடியாத ஒரு தனித்தன்மை தமிழ்க் கலைச்சொற்களுக்கு உண்டு. அதுதான் வேர்ச்சொல் தேடல்.
ஆங்கில மொழியில் ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான வேர்ச்சொல்லை லத்தீன், கிரீக், ஹீப்ரு அல்லது வேறு மொழிகளில் தேடிப் பெறவேண்டும். ஆங்கில மொழியில் வேர்ச்சொல் கிடைப்பது மிக அரிது. ஏனெனில், ஆங்கில மொழி, மேற்கூரிய மொழிகளின் கூட்டுக் கலவையாகும்.
ஆனால், அதே சமயத்தில் இந்தியிலோ அல்லது மராத்தியிலோ ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச்சொல்லை சம்ஸ்கிருதத்திலோ, பாலி, பிராகிருத மொழிகளிலோ தேடிப் பெற வேண்டும். கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளின் சொல் உருவாக்கத்துக்கான வேரை சமஸ்கிருதத்திலோ அல்லது தமிழிலோ தேட வேண்டும். ஆனால், தமிழில் ஒரு கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான வேர்ச்சொல்லைத் தமிழில் மட்டுமே காண முடியும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் தேடிக் காணவே முடியாது.
‘இன்றையக் கலைச்சொல் தேவையை நிறைவு செய்யுமளவுக்குத் தமிழில் அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கான வேர்ச்சொற்கள் வேண்டுமளவு கிடைக்க வாய்ப்புண்டா? என வினா எழுப்பத் தோன்றலாம். இதற்கு நாம் விடை கூறுவதைவிட தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்தவரும் ‘மொழியியல் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான டாக்டர் எமினோ அவர்கள் கூறுவதைக் கேட்போம். “உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது” எனப் பாராட்டியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கதாகும். வேர்ச்சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் மிகுதியாக விரவிக் கிடக்கின்றன. அதையெல்லாம்விட தமிழில் புதிய வேர்களை எளிதாக உருவாக்கவும் இயலும். அந்த அளவுக்கு நெகிழ்வுத் திறமுள்ள மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது.

கலைச்சொல்லாக்கப் பணியை மேற்கொள்வோருக்கு இருக்க வேண்டிய தகுதிப்பாடுகள் என்னென்ன என்பதிலும் நாம் கருத்துன்ற வேண்டியவர்களாக உள்ளோம்.
முதற்கண் எந்தத் துறை சார்ந்த சொல்லாக்க முயற்சி மேற் கொள்ளப்பட விருக்கிறதோ அந்தத் துறையில் சிறப்பறிவு பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த ஆங்கிலக் கலைச்சொல் உணர்த்தும் பொருள்துட்பத்தை நன்கு உணர்ந்து, தெளிந்து, அதனைத் தமிழில் முழுமையாக வெளிப்படுத்தத்தக்க வகையில் தமிழ் சொல்லாட்சி வல்லவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழ் வேர்ச்சொற்களை இனங்கண்டு தேர்வு செய்யுமளவுக்கு தமிழ் இலக்கிய புலமை அல்லது பயிற்சிமிக்கவராக இருத்தல் வேண்டும். சரியான கட்டுக்கோப்பில் இலக்கண வரம்புகளுடன் சொல்லை வடித்தெடுக்குமளவுக்கு இலக்கண அறிவும் அவசியம். இலக்கியங்களிலோ அல்லது அன்றாட வழக் காற்றிலோ உரிய சொல் அல்லது வேர்ச்சொல்லை இனங்காணும் திறன் வேண்டும். உரிய சொல்லோ அல்லது வேர்ச்சொல்லே கிடைக்காதபோது புதிய சொல்லை உருவாக்க மொழியியல் அறிவு ஒரளவு அவசியம். இவையே கலைச்சொல்லாக்க வல்லுநருக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகளாகும்.
கலைச்சொல்லாக்கத்தில் முதல் உரிமையும் பொறுப்பும் உடையவர்கள் அவ்வத்துறை வல்லுநர்களே என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களில் போதிய தமிழறிவும் இலக்கியப் பயிற்சியும் இலக்கண அறிவும் உடையவர்கள் இப் பணியில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதிக அளவு இல்லை யென்றாலும் ஒரு சில சொற்களையேனும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இப்பணியில் ஒரு சிலர் முனைப்புக் காட்டியபோதிலும் பெரும்பாலான தமிழறிந்த துறை வல்லுநர்கள் “கலைச் சொற்கள் தமிழில் மிகுதியாக வேண்டும். அதில் நாம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்”, என வேண்டுகோள் விடுவதிலும் அறிவுறுத்துவதிலும் ஆர்வம் காட்டி, காலத்தை ஒட்டுகிறார்களே தவிர, அப்பணி தங்களுக்குரியது எனக் கருதி செயல்படத்

துணிவதில்லை. மற்றவர்களைச் செய்யச் சொல்லும் முன், தான் அதில் முனைப்போடு, ஈடுபட்டு வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு ஏனோ அவர்களிடம் இல்லாமற் போய்விடுகிறது.
இந்நிலையில்தான், ஒரளவு துறையறிவு பெற்றவர்கள் முனைந்து மேன்மேலும் துறையறிவை முனைப்போடு வளர்த்துக்கொண்டு, அதனடிப்படையில் சொல்லாக்கம் செய்து, அதனை அவ்வத்துறை வல்லுநர்களின் மேற் பார்வையோடு செப்பனிட்டு, தகுதிமிக்க கலைச்சொற்களாக உருவமைத்து வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். இவர்களின் வெற்றி தமிழின் வெற்றியாகவும் அமைகிறது. என்போன்ற ஆர்வலர்கள் அம்முறையில் தான் வீறுநடைபோட்டு வருகிறோம். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்றாற்போல் துறை வல்லார்க்கு அவர் சிறப்பறிவு பெற்ற ஒரு துறை மட்டுமே களமாக அமைகிறது. ஆனால் என்போன்ற ஆர்வலர்கட்கு எதனையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பெருவேட்கையோடு முனைந்து கற்பதால், ‘இதுதான் நம் துறை’ என்ற வேறுபாடு இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் எல்லையே இல்லாமல், எல்லா துறைகளுமே களமாயமைகின்றன. இவ்வகையில் தான் உயிரியல் முதல் கணினி ஈராக அனைத்து அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கான ஏழு கலைச்சொல் தொகுதிகளை (சுமார் நான்காயிரம் பக்கங்களில், சுமார் ஒன்றரை இலட்சம் கலைச்சொற்கள்) வெளியிட முடிந்தது. வேறு சிலரும் என்னைப் போலவே சொல்லாக்கப் பணியில் முனைப்புக் காட்டி உழைத்து வருகிறார்கள்.
கலைச்சொல்லாக்க முயற்சியைப் பொறுத்தவரை, ஆர்வமுடையவர்கட்கு, சொல்லாக்க வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நன்னோக்கில், ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் சொல்வதோடு அமையாமல், சொல்விளக்கம், பொருள்விளக்கங்களைப் படத்தோடு தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதைப் படித்துத் தெளிவுபெறும் சொல்லாக்க ஆர்வலர்கள் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற் செட்டும், பொருட்செறிவுமுடைய, நயமிக்க கலைச்சொற்களை உருவாக்க வாய்ப்பேற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.

இனி, கணினி கலைச்சொல்லாக்கத்தைப் பொறுத்தவரை நான்மேற்கொண்டு வரும் வழிமுறைகள் சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.
எனது கணினி அகராதிகளை வெறும் ஆங்கில-தமிழ்க் கலைச்சொல் பட்டியல்களாக (Glossaries) அமைக்காமல், களஞ்சியத்த ன்மையும் அகராதித் தன்மையும் ஒருங்கியைந்த, ‘களஞ்சியஅகராதி’களாக அமைத்து வருகிறேன். காரணம், அவை சொல் விளக்கமும் பொருள் விளக்கமும் ஒருங்கிணைந்து படிப்போருக்கு தெளிவைத் தரவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். அதற்காக ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இயன்றவரை பல கலைச் சொற்களைத் தருகிறேன். சான்றாக,
Data தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.
Mouse கட்டி, கட்டுக் கருவி, சுட்டுப்பொறி, கட்டு துண்பொறி.
Key விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவி
Pixel படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு.
இதில் ஏதாவது ஒரு சொல் நிலைபேற்றுத் தன்மையைப் பெறாதா என்ற எண்ணமும் நாளை தரப்படுத்தம் செய்ய விழையும்போது, ஒப்பீட்டாய்வு செய்வதற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தேவைப்படுமே என்பதும் காரணங்களாகும்.
கணினித்துறை போன்ற அறிவியலுக்கான கலைச்சொல் உருவாக்கத்துக்கு இலக்கியத் தரமான சொற்களைப் பயன்படுத்த சிலர் விழைவதில்லை. உரிய பொருளை விளக்க அவைகளால் இயலாது என்று கருதப்படுகிறது. ஆனால், தக்க மாற்ற திருத்தங்களுடன் பயன்படுத் தினால் கருதிய பொருளைத் திட்ப, நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,
Jergon குழுஉச் சொல்
Slug பருங்குழை
Finesse நய நுட்பம்
Hosț ஒம்புநர், புரவலர்
Malfunction பிறழ்வினை
என அமைக்கலாம்.

எல்லாவற்றிற்கும் இலக்கியச் சொல்லைத் தேடி ஒட வேண்டியதில்லை. அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சாதாரணச் சொற்களையே பயன்படுத்தி அறிவியல் செய்திகளை நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,
Jagges பிசிறுகள்
Pad திண்டு
Glarefilter கூசொளி வடிகட்டி
கலைச் சொல்லாக்கத்துக்கான வேர்ச்சொற்கள் வேண்டிய அளவுக்கு இலக்கிய நூல்களிலும் அன்றாட பேச்சு வழக்குச் சொற்களிலும் கிடைக்கின்றன. அவற்றைப் புதிய பகுதி, விகுதிகளோடு உருவாக்கினால் பொருளாழமிக்க சொற்களாக உருவாக்க இயலும்.
Quantum துளியம்
Terminal முனையம்
Bit துண்மி
Robot எந்திரன்
தெளிவுக்காக இரு சிறு சொற்களை இணைத்துப் புதுச் சொல்லாக்கிப் பொருள் விளக்கம் பெறலாம். சான்றாக,
Antenna அலைவாங்கி
Virus நச்சுநிரல்
Audio கேட்பொலி
கூடுமானவரை ஆங்கிலத்திலிருந்து சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆங்கிலச் சொல் உணர்த்தும் பொருளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அதனைத் திட்பமாக உணர்த்தும் சொற்களைக் கொண்டு சொல்ல முற்படவேண்டும். சான்றாக,
Handset ஒலியுறுப்பு
Cold fault உடன்தெரியும் பிழை
Creet விளங்கா மொழி
FemaleConnector துளை இணைப்பி
Gun வீச்சுப்பொறி
ஒரு கணினிச் சொல் தனியாக வரும் போதும் சொல் தொடருடன் இணைந்து வரும்போதும் சொல் மாறாமல் இடம் பெறச் செய்வதன்மூலம் பொருள் தெளிவை அளிக்க முடியும். சான்றாக,

Input உள்ளீடு
Inputting உள்ளிடுதல்
Input data உள்ளிட்டுத் தரவு
Input Unit உள்ளிட்டகம்
எனக் குறிக்கலாம்.
தலைப்பெழுத்துகளைக் கொண்ட குறும்பெயர்களை ஒலி பெயர்ப்பாக இணைந்து வரும் சொற்களுக்குப் பொருள் தரும் வகையில் அமைக்கலாம். சான்றாக,
PERT Chart பெர்ட் வரைபடம்
PET Computer பெட் கணினி
மற்றபடி, நிறுவனப் பெயர்கள், மென்பொருள் தொகுப்புப் பெயர்கள், பொருட்பெயர்கள், அளவீடுகள் மற்றும் சிறப்பு பெயர்களை ஒலி பெயர்ப்பாகக் குறிக்கலாம்.
Macpaint மாக்பெய்ன்ட்
HertS ஹெர்ட்ஸ்
Javlin plus ஜேவ்லின் பிளஸ்
Hentry ஹென்றி
மற்றொன்று ஒலிக்குறைபாடு. ஸ ஷ, ஜ, ஹ, க்ஷ ஒலிக்குறிகள் தமிழில் இல்லாததால் Geoge-ஐ குறிப்பிடும்போது ‘சார்சு’ என்றுதான் எழுத நேரும். இவ்வொலிக் குறைப்பாட்டை நீக்க ‘ஜார்ஜ்’ என்றே எழுதலாம். ஏனெனில், கிரந்த எழுத்துகள் எனக் கருதப்படும் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்ற எழுத்துகள் சமஸ்கிருத வரிவடிவங்கள் அல்லவே அல்ல. அவை ஒலி வடிவங்கள் மட்டுமே. சில சம்ஸ்கிருத ஒலிகளை உரிய முறையில் வெளிப்படுத்த தமிழில் எழுத்துகள் இல்லை என்ற குறைபாட்டை நீக்க, பல்லவர்கள் காலத்தில் காஞ்சி மாநகரில் தமிழ் வரிவடிவச் சாயலில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் கன்னடத்திலோ தெலுங்கிலோ இல்லை. தமிழிலும் தமிழிலிருந்து கிளைத்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளன. அதிலும் கிரந்த எழுத்துகள் பலவாக இருந்தாலும் இந்த நான்கைந்து எழுத்துகளை மட்டுமே தமிழ் பட்டும்படாமலும் தன்னுடன் உறவாட
.

அனுமதித்து வருகிறது. எனவே, ஆங்கில எழுத்தொலியை ஒலி பெயர்ப்பின்போது முழுமையாகப் பெற இக்கிரந்த எழுத்துகளை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்.
இப்போது வெளியாகும் இப்பேரகாதிக்கு ஒரு சிறப்பு உண்டு. பயன்பாட்டுக்கு வந்திருப்பினும் ஆங்கில அகராதியில் இடம்பெறாத பல புதிய சொற்கள் இப்பேரகராதியில் இடம் பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் நாடுகள் சென்றிருந்தபோது இக்கலைச் சொற்களைச் சேகரிக்க இயன்றது. ஆங்கில அகராதிக்கும் முந்தி, தமிழ் அகராதியில் நேர்ச் சொல்லாக்கம் இயல்கிறதென்றால் தமிழ் இயல்பிலேயே ஆற்றல் மிக்க அறிவியல் மொழி என்பது தெளிவாகிறதன்றோ!
இப்பேரகராதி சிறப்பாக வெளிவரப் பெருந்துணையாலமைந்த கணினித்துறை வல்லுநரும் சிறந்த கணினி எழுத்தாளருமான திரு. மு. சிவலிங்கம், என் உடன் படித்த கல்லூரித் தோழரும் அறிவியல் அறிவும் தமிழறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற புலமைச் செல்வர் இரா. நடராசன், கணினித் தமிழ் புலமைமிக்க பன்னூலாசிரியர் திரு. ராம்குமார் ஆகியோரின் உதவியும் ஒத்துழைப்பும் மறக்க முடியாதவை. அவர்களுக்கு என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சிவடைகிறேன்.
என் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு அடிநாள் தொட்டே பெருந்துணையாகவும் பெரும் ஊக்கியாகவும் இருந்து வருபவர் என் துணைவியார் சித்தை செளதா அவர்களாவர். இப்படியொரு பேரகராதி உருவாக்கப்பட வேண்டும் என்ற உணர்வை என்னுள் இடையறாது விதைத்து வந்தவர். இப்பேரகராதி உருவாக்கத்துக்கு எல்லா வகையிலும் பேரூதவியாயிருந்த அவர்கட்கும் எனது தமிழ் வளர்ச்சிப் பணி முயற்சிகளுக்கும் சமுதாயப் பணிகளுக்கும் பெருந்துணையாயிருந்து வரும் பெருந்தகை அல்ஹாஜ் (மெஜஸ்டிக்) கே. வி. எம். கறீம் அவர்கட்கும் என் நன்றி என்றும் உரித்தாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று 1, 600 பக்கங்களைக் கொண்ட கணினிக் களஞ்சியப் பேரகராதி (வேறு இந்திய

மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோ கணினிக்கு இவ்வளவு பெரிய அகராதி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை) நூலைத் தமிழில் வெளியிட இயன்றதென்றால், அதற்கு என் திறனோ இப்பணியில் என்னோடு இணைந்து பணியாற்றும் நண்பர் களின் திறமையோ மட்டும் காரணமில்லை. தமிழின் தனிப்பெரும் ஆற்றலே காரணம். ஏனெனில், இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக, அறிவியலைச் சொல்வதற்கென்ற உருவான மொழியாக அமைந்திருப்பதுதான்.
இன்று “கணினிக் களஞ்சியப் பேரகாதி” உங்கள் கைகளில் தவழப் பெருந்துணையாயமைந்தவர் கப்பலோட்டும் தமிழர், பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களாவார்.
“செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலின் மறு பதிப் பாயமைந்துள்ள ஹாஜி. பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வி வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் மட்டுமல்லாது தாய்மொழியாம் தமிழ் வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வருபவர். கீழக்கரை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடும் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்கு சீதக்காதி டிரஸ்ட் மூலம் பரிசளித்தும் வருவதே இதற்குத் தக்க சான்றாகும். அதன் தொடர்ச்சியாகவே இப்பேரகராதி விரைந்து வெளிவரவும் துணை நின்றார்கள். தமிழ் உள்ளவரை அவரது கொடைக்குணமும் தமிழ் வளர்ச்சியில் காட்டும் பேரார்வப் பெருக்கும் தமிழ்கூறு நல்லுலகால் நினைவுக் கூறப்படும் என்பது திண்ணம். காலத்தைக் கடந்து நிற்கும் அவரின் அரிய சேவையை என்றென்றுமாகப் பதிவு செய்யவே இந்நூலை அன்னாரின் பவழ விழா நினைவாக அவருக்குக் காணிக்கையாக்கி உள்ளேன்.
எனது முந்தைய நூல்களை ஆதரித்ததுபோன்றே இப்பேரகராதியையும் தமிழுலகம் இரு கரமேந்தி ஏற்று ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்புகிறேன்.
மணவை முஸ்தபா
நூலாசிரியர்⁠
தீயின் கண்டுபிடிப்பு திருப்புமுனை ஆனது. சக்கரம் சரித்திரத்தை மாற்றியது. மின்சாரம் வாழ்க்கையை எளிமை ஆக்கியது. கணினியின் கண்டுபிடிப்போ அகில உலகத்தையும் ஒரு கையகலச் சிப்புக்குள் அடக்கி விட்டது. நவீன சமுதாயத்தை அடையாளம் காட்டும் ஒரு கருவியாய் கணினி விளங்குகிறது. மனித வாழ்வின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாய் பிணைந்து விட்டது. மக்களின் அன்றாட நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் கணினியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
இத்தகைய காலகட்டத்தில்தான், அறிவியல் தமிழ் அறிஞர், வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களின் ‘கணினி களஞ்சியப் பேரகராதி’ நம் கைகளில் தவிழ்ந்து கொண்டிருக்கிறது. கணினி என்பது மெத்தப் படித்தவர்களின் சொத்தாக மட்டும் இருந்துவிடக் கூடாது. கணினிக் கல்வி பெரு நகரங்களில் வாழ்வோரின் பெருமிதமாய் நின்றுவிடக் கூடாது. தமிழ்நாட்டின் சிற்றுரில் தமிழ் வழியாய் கல்வி கற்கும் மாணவனுக்கு, கணினி அறிவியல் அந்நியமாகிவிடக் கூடாது என்கிற ஆவேசத்தோடு இக்களஞ்சியப் பேரகராதியை திரு. மணவையார் எழுதி வெளி யிட்டுள்ளார். நவீன அறிவியலில் நாம் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆங்கிலத்தின் மூலமாகத்தான் கணினி அறிவைப் பெற முடியும் என்கிற மாயை உடைத்தெறியப் படவேண்டும். கணினித் துறை சார்ந்த அனைத்து நுணுக்கங்களையும் எளிய தமிழில் எடுத்துக் கூறமுடியும் என்கிற சவாலுக்குச் சாட்சியம் கூறுகிறது இந்நூல்.
கணினியின் வரலாற்றையும் அதன் இன்றைய தாக்கப் பரப்பையும், பயன்பாட்டுத் தளங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான், திரு. மணவை முஸ்தபா அவர்களுடைய முயற்சியின் ஆக்கத்தையும், ஆற்றியுள்ள பங்களிப்பின் தாக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

கணினியின் வளர்ச்சிப் படிகள்
தொடக்கக் காலத்தில் கணினிகள் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வந்தன. 1951இல் தான் கணினி விற்பனைக்கு வந்தது. ரேடிங்டன் நிறுவனம் யுனிவாக்-1 கணினியை அமெரிக்க அரசுக்கு விற்றது. மிகப் பெரிய கட்டிடத்தில் நிறுவப்பட்ட அக்கணினி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.
அதன் பிறகு பரவலாக விற்பனைக்கு வந்த கணினிகளும் பல நூறுபேர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெருமுகக் கணினிகள் (Main Frames) ஆகும். இவற்றை மிகப் பெரிய வணிக நிறுவனங்களே வாங்கிப் பயன்படுத்தி வந்தன. அடுத்து, நடுத்தர நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதைவிடச் சிறிய (Mini) கணினிகள் விற்பனைக்கு வந்தன. 1971ஆம் ஆண்டில் துண்செயலி (Micro Processor) கண்டுபிடிக்கப்பட்டபின், கணினியின் வளர்ச்சிப் படியில் திடீர் தாவல் ஏற்பட்டது.
1977ஆம் ஆண்டில் விலை குறைந்த மிகச் சிறிய (Micro) ஆப்பிள் கணினிகள் பெருமளவில் விற்பனைக்கு வந்தன. நிறுவனங்கள் மட்டுமே கணினியை நிறுவ முடியும் என்ற நிலைமாறி, தனியார் ஒருவர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை வாங்க முடிந்தது. எனவே, அக்கணினி சொந்தக் கணினி (Personal Computer-PC) என்றழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சொந்தக் கணினிகளை ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தபின் உலகெங்கிலும் கணினியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. நுண்செயலி மற்றும் நினைவகச் சிப்புகளின் திரை, விசைப்பலகை, அச்சுப் பொறி போன்ற துணைச் சாதன உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி, மனிதனின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தும் ஏராளமான மென்பொருள் தொகுப்புகளின் உருவாக்கம் காரணமாக, கணினித் துறையில் அதிகமாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கணினியில் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

நிறுவனங்கள் தத்தம் அலுவலகங்களில் பயன்படுத்திவந்த தனித்த கணினிகளை நன்றாகப் பிணைத்து, கணினிப் பிணையங்கள் (Computer Networks) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area), ஒரு பெருநகரில் (Metro Area) மற்றும் கணினிகளை ஒருங்கிணைத்துப் பிணையங்கள் உருவாயின. தகவல் மற்றும் மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் சாத்தியமானது. அரசுத் துறையினர், பல்கலைக் கழகங்கள், பொது நூலகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு/விளிபரப்புப் பிணையங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டில் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Back Bone Network) ஒருங்கிணைக்கப்பட்டு இணையம் (Internet) உருவானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தை ஒரு நொடியில் பெற வழியேற்பட்டது.
எல்லா விந்தைகளுக்கும் அப்பால் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையம் உலகம் அனைத்தையும் ஒரு கிராமமாக (Global Village) ஆக்கிவிட்டது. தொழிற்புரட்சிக்கு அடுத்தபடியாகத் தகவல் புரட்சி (information Revolution) இணையத்தின் மூலமாய் இன்று உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் காலையில் எழுந்து இரவில் உறங்கப் போகும்வரை அனைத்துப் பணிகளையும் இணையம் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்தித்தாள் படித்தல், உறவினர்க்குக் கடிதம் அனுப்புதல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்/கருத்துப் பரிமாற்றம், நண்பர்களுடன் அரட்டை, இசை/சினிமாப் பொழுதுப்போக்கு, விளையாட்டு, நூலகப் படிப்பு, தொலைபேசி உரையாடல், ரயில்/ விமானப் பயண முன்பதிவு, கடையிலுள்ள பொருள்களைப் பார்வையிடல், பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதல், ………. மூலம் இணையத்தில் இணைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியும். வேறென்ன வேண்டும்?

கணினிக் கல்வியின் இன்றியமையாமை
கணினியின் ஆதிக்கம் பரவப் பரவ கணினி அறிவியலைக் கற்றுத் தேர்வதும் கட்டாயமாகிவிட்டது.
ஒவ்வொரு எந்திரத்திலும் அதற்கே உரிய பாகங்கள் இருகின்றன. ஆனால் ஸ்குரூ டிரைவர் என்று சொல்லப்படும் திருப்புளி எந்த எந்திரத்தின் பாகமும் இல்லை. ஆனால் திருப்புளி இல்லாமல் எந்த எந்திரத்தையும் கையாள முடியாது. எந்தவொரு எந்திரத்தையும் கழற்ற, பழுதுபார்க்க, இனணக்க, பராமரிக்க திருப்புளி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கணினியைத் திருப்புளிக்கு ஒப்பிடலாம். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட எந்திரத்தின் பாகம் போல் விளங்கிய கணினி இன்றைக்கு அனைத்து எந்திரங்களையும் கையாள வல்ல திருப்புளியாய் ஆகிவிட்டது.
ஆம். ஒரு காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாகவே இருந்து வந்த கணினி அறிவியல் நாளடைவில் தொழில்நுட்ப அறிவியலின் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று, இன்றைக்கு எந்த ஒரு அறிவியல் துறையையும்து அணுகி ஆய்வு செய்ய உதவும் ஒரு கருவியாகப் பரிணமித்துள்ளது. எந்த அறிவியல் பாடடத்தைக் கற்பவராயினும், எந்த தொழில்நுட்பத் துறையில் பயில்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேன்டும் என்பது கட்டாயத் தேவையாகி விட்டது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டின் சின்னஞ்சிற்றூர்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் கணினி கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஏராளமாய்ப் பெருகி விட்டன. மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும கணினியில் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றன்ர். கணினியை இயக்கத் தெரிந்தாலே நல்ல வேலை கிடைக்குமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிற்து. அதில் தமிழ் நாட்டு இளைஞர்களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி

நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கணினி அறிவியலைத் தேர்வுச் செய்து விரும்பிப் படிக்கின்றனர்.
பத்திரிகைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நாள்தோறும் கணினித் துறை சார்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் கணினி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது.
அச்சுத்துறையில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ். அது போலவே இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ் தான். தமிழுக்கென்றே தமிழில் 13, 000 இணைய தளங்கள் இருப் பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே கணினிக் கென்று தனியாகப் பத்திரிகை வெளிவந்தது தமிழ்மொழியில்தான். கணினி அறிவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
கணினித் திரைகளில் தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக் கிறது. உரைத் தொகுப்பான்கள் (Text Editor), சொல் செயலிகள் (Word Processor), தகவல்தள மேலாண்மை (Database Management), இ-மெயில் (E-Mail), இணைய உலாவி (Browser), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), குழுந்தைகள், மாணவர்கட்குப் பயன்படும் பாடங்கள், வெளிநாட்டில் வாழும் மக்கள் தமிழ் கற்றுக் கொள்ள உதவும் தொகுப்பு, பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) இன்னும் இவை போன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழ்மொழியிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப் பட்ட காலத்தில்தான் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழின் ஒர் அங்கமான கணினித் தமிழ் செழுமைப் பெற்று வளரத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கணினி அறிவியல் வளர்ந்த வேகத்தில் கணினி தமிழ் வளரவில்லை என்றே கூறவேண்டும்.
பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல கணினித் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணினித் தமிழும்

தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோல் பயன்படுத்தப்பட வேண்டும். கணினித் தமிழ்ச் சொல்லாக்கம் தரப்படுத்தப்பட்டு, கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ்சியம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அதற்கான திசை வழியில் அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழ்ச் சங்க அமைப்புகளோ போதுமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், ஒரு தனியாளாக நின்று, இம்மாபெரும் கடமையைத் தோளில் சுமந்து, தொலைநோக்குப் பார்வையோடு, திரு மனவை முஸ்தபா அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள இக்கணினிக் களஞ்சியப் பேரகராதியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.?
மணவையாரின் அறிவியல் தமிழ்ப்பணி
அறிவியல் தமிழ்ப் பணிக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்ததுமே, சேலம் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். தம் பேராசிரியர்களிடம் வாழ்த்துப் பெற சிதம்பரம் சென்றார். அங்கு நடைபெற்ற பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா? என்ற கருத்தரங்கு இவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவயல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழில் கற்பது முடியாத செயல். பயிற்சி மொழி தமிழ் என்பது கானல் நீர் என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். வெகுண்டெழுந்த மணவையார், தமிழால் முடியும். சொல்வதோடு நில்லாமல் செயல்மூலம் தமிழால் முடியும் என்பதை நிறுவிக் காட்டுவேன். இன்று முதல் இதுவே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழுக்காக என் வாழ்வையே அர்பணித்துக் கொள்கிறேன் என்று முழங்கிய தோடு மட்டுமின்றி, கையிலிருந்த ஆசிரியர் பணிக்கான ஆணையை அங்கேயே கிழித்துப் போட்டார். அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இன்று வரை அந்தப் பாதையிலேயே வீறுநடைபோட்டு வருகிறார்.

ஒவ்வொரு அறிவியல் துறையிலும் புதிய புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் குறிக்கோள். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு, ‘அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். இந்நூல்களில் ஐம்பத்து நான்கு அறிவியல், தொழில்நுட்ப பிரிவுகளுக்குரிய கலைச் சொற்களையும் பொருள் விளக்கத்தையும் உருவாக்கி வழங்கியுள்ளார். அடுத்து பட விளக்கங்களோடு, மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலின் ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாகவும் அறிவியல் தகவல்களைச் செய்தித் துணுக்குகளாகத் தந்துள்ளார். இந்த வகையில் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதலாவது வெளிவந்த முதல் நூல்கள் இவையெனில் மிகையாகாது.
அறிவியல் கற்றவர் தமிழறிஞர்களாக விளங்குகிறார்கள். தமிழ் கற்றவர்கள் அறிவியல் அறிஞர்களாக விளங்க முடியாதா? இக்கேள்விக்குத் தக்க பதிலாகத் தன்னையே மாற்றிக் கொண்டவர் திரு. மணவையார். கடந்த நாற்பதாண்டுகளாக அறிவியல் துறைகள் பலவற்றையும் கற்றறிந்த அறிவியல் அறிஞராகத் திகழ்கிறார். இவர் வெளியிட்ட மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் இவரின் மருத்துவ அறிவைப் பறைச்சாற்றும். மருத்துவத் துறையின் பதினைந்து உட்பிருவுகளுக்கான கலைச்சொற்களையும் பொருள் விளக்கங்களையும் படங்களையும் தாங்கி வெளிவந்த இந்த நூல் தமிழக அரசின் பரிசையும் பாராட்டையும் பெற்றதோடு மக்களின் பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் துறையாய் வளர்ந்து நிற்கும் கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ் சியத்தை உருவாக்க வேண்டும் என்பதும் இவரது வேட்கையாக இருந்து வந்தது. தொலைநோக்குப் பார்வையுடன் ஐந்தாறு ஆண்டுகட்கு முன்பே இதற்கான பணியைத் தொடங்கி விட்டார். இதற்காக, கணினி அறிவியலையும், கற்கத் தயங்கவில்லை. இவர் அண்மையில் அமெரிக்கா, கனடாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது அப்பயணத்தை கணினிக் கலைச்சொல் களஞ்சியத்தை

செம்மையாக உருவாக்கும் பணிக்காகவே அப்பயனத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார்.
திரு. மணவையாரின் கலைச்சொல் களஞ்சியங்கள் அனைத்திலும் ஒரு சிறப்புக் கூறு உண்டு. அகர வரிசையில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும்போது அது அகராதி ஆகிறது. அத்தோடு நில்லாமல், உடன் சொல் விளக்கத்தையும் பொருள் விளக்கத்தையும் விரிவாகத் தருவதால் அது கலைக் களஞ்சியமாகப் பரிணமிக்கிறது. ஆங்காங்கே தேவையான இடங்களில் படங்களும் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்புக் கூறாகும்.
மொழியாக்கச் சிறப்புக் கூறுகள்
அகர வரிசையில் சொற்களின் பொருளைக் கூறும் நூலை ‘அகராதி’ என்கிறோம். ஒவ்வொரு சொல்லின் விளக்கத்தையும் விரிவாகத் தரும்போது ‘கலைச்சொல் களஞ்சியம்’ என்கிறோம். சொல்லின் பொருள், விளக்கம் இவற்றோடு நில்லாமல் சில எடுத்துக்காட்டுகளையும் கூறி விளக்குவதை என்னவென்பது? ஒரு பாட நூலைப் படிப்படி போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக Hexadecimal Notation என்பதை பதினாறிலக்கக் குறிமானம் என்று பொருள்கூறி, இதில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் A, B, C, D, E, F என்ற எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, A60B என்ற ஹெக்ஸா எண்ணை 42507 என்ற டெசிமல் எண்ணாக மாற்றும் முறையையும் விளக்கியுள்ளார். அதேபோல் Factorial என்ற சொல்லை விளக்கும்போது !!-ன் மதிப்புக் கண்டறிவது எப்படி எனவும் விளக்கப்பட்டுள்ளது.
Line surge என்ற சொல்லுக்கு மின்சார வெள்ளம், மின்தொடர் எழுச்சி என்று பொருள் கூரி, திடீரென்று உயர்ந்த வோல்ட் மின்சாரம் பாயும் நிலை என்ற விளக்கம் கூறி, உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தகவல்கள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய

இணைப்புகள், தகவல் உள்ளீட்டு முனையங்கள், தகவல் பரிமாற்றச் சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு என்று அதன் விளைவுகளைக் கூறி, திடீரென்று மின்சார டிரான்ஸ்பார்மர்களை இயக்குதல், பிற துணைக் கருவிகளை இயக்குதல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு என்று அதன் காரணங்களையும் எடுத்துக் கூறுவதுடன் நில்லாமல், உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம் என்று பாதுகாப்பு வழிமுறையையும் கூறுவதைப் பார்க்கும்போது அகராதி, கலைக் களஞ்சியம் என்கிற வரம்புகளையும் உடைத்தெறிந்து ஒரு புதிய பரிமாணத்தையே எட்டி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவதை Geek என்று கூறுகிறார்கள். அதனை ‘கற்றுக்குட்டித்தனம்’ என்று நாகரிகமான முறையில் மொழி பெயர்த்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. Eavesdropping என்பதை ஒற்றுக் கேட்டல் என்கிறார். Hacker-களை குறும்பர் எனச் செல்லமாகக் குறிப்பிடுகிறார். Paddle என்பதைத் துடுப்பு, மத்து என மொழி பெயர்க்கிறார். Menu tem என்பதை “பட்டி உருப்படி” என்கிறார். Packet என்பதைப் பொதிவு, பொட்டலம் என்று குறிப்பிடுகிறார். Pattern என்பதை தோரணி, தினுசு என்கிறார். இவ்வாறு தமிழ்பேசும் மக்களிடையே பேச்சு வழக்கில் பயன்படுத்தக்கூடிய பொருள் பொதிந்த பொருத்தமான தமிழ்ச் சொற்களை மொழியாக்கமாகக் கொடுத்திருக்கும் பாங்கு திரு. மணவையாருக்கே உரிய தனித்தன்மை என்றே கூறவேண்டும்.
Flexible என்பதன் பேச்சு வழக்குச் சொல் Floppy என்பதாகும். எனவே Flooppy Disk ‘நெகிழ் வட்டு’ என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மெல்லியதாக இருப்பதாலும் Hard Disk என்பதற்கு மாறாக இருப்பதாலும் ‘மென் வட்டு’ என்றும் குறிக்கலாம். செருகி எடுத்துப் பயன்படுத்துவதால் செருகு வட்டு என்ற மூன்று சொற்களையுமே தந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கிறார் திரு. மணைவயார் அவர்கள். Hard Disk என்பது பிரிக்க

முடியாதவாறு தனிப் பொதியுறையில் நிரந்தரமாய் பிணைக்கப்பட்டுள்ளதால் அதனை நிலை வட்டு என மொழியாக்கம் செய்துள்ளதும் முற்றிலும் பொருத்தமே.
இவ்வாறு திரு. மனவையாரின் மொழியாக்கச் சிறப்புக் கூறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்று பழம் பெருமை மட்டுமே பேசிக் காலம் கழிக்காமல் நல்ல தமிழை நல்ல அறிவியல் தமிழை புத்தம் புதுத் தமிழைப் பற்றி எந்த நேரமும் சிந்தித்துச் செயலாற்றி வரும் திரு. மணவை யாரைப் போல் இன்னொரு தமிழறிஞரைக் காண முடியுமா என்பதே சந்தேகத்துக்குரிய கேள்வி. அரசும், பல்கலைக் கழகங்களும், வல்லுநர் குழுவும் செய்ய வேண்டிய ஒரு பணியைத் தனியொருவராக நின்று சாதித்துள்ள திரு. மணவையார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆங்கில மொழியில் கணினித் துறைக்கென எத்தனையோ அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்திய மொழிகளில் இதுவே முதலாவது நூலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவ்வண்⁠
மு. சிவலிங்கம்

காணிக்கை
நம்மில் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், தாங்கள் தேடிய செல்வத்தை உரிய வழியில் செலவழிக்கத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே உண்டு. அத்தகையோருள் தலையாயவராக விளங்குபவர் சமுதாயச் சேவைச் செம்மல், பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.
நற்குணக்குன்றான அவர்கள் அன்பு, பரிவு, எளிமை, வள்ளன்மை எனும் சொற்களுக்கு இலக்கணமாகவே விளங்குபவர். இளமைத் தொட்டே தனித்துவச் சிந்தனையிலும், அறிவாற்றலிலும் மிக்குயர்ந்து, வணிகத் துறையில் தனக்கென தனி வழி வகுத்து, கடும் முயற்சியாலும் இடையறா உழைப்பாலும் உயர்ந்து, பன்னாடு போற்றும் வணிகராக, பல்முனைத் தொழில் மேதையாக உலகெங்கும் காலூன்றி, அழுத்தமான தடம் பதித்து, தாய் மண்ணுக்குப் பெரும் புகழ் தேடித் தரும் பெரியார். ‘கப்பல் தலைவர்’ எனும் பொருள் பொதிந்த ‘மரைக்காயர்’ எனும் சொல்லுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகெங்கும் கப்பல் செலுத்தும் ‘கப்பலோட்டும் தமிழன்’ எனும் பெருமைக்குரிய அடைமொழியோடு உலா வருபவர்.
தம் நுண்மாண் நுழைபுலத்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில்களை உருவாக்கி, பல்லாயிரம் பேர் பணிபுரியவும் அதன் மூலம் வாழ்வில் வளம் பெருகவும் வழி கண்ட பிறர் நலம் பேணும் பேராண்மையாளர்.
நத்தைக்குக் கூடுபோல் தான் சார்ந்த இஸ்லாமிய சமுதாயம் ஏழ்மை, அறியாமை, சுகாதாரக்கேடு போன்றவற்றால் நலிவடைந்து கிடக்கும் நிலையை மாற்றி, அவ்வடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் மேன்மையுற கல்வி ஒன்றே வழி எனத் தெளிந்து, மழலையர் பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, சமுதாயத்தில் புது சரித்திரம் படைத்த சாதனை நாயகர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.
இன்றையப் போக்குக்கும் காலத் தேவைக்குமேற்ப அறிவியல், தொழில்நுட்பக் கல்வி மூலமே வாழ்வு வளம் பெற

முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கிய ‘கிரஸென்ட் இன்ஜினியரிங் கல்லூரி’ அமைந்து, ஆற்றலாளர்களை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது.
அறிவு வளர்ச்சியின் அடித்தளம் பெண்களே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்த பவழ விழா செல்வர், கீழக்கரையில் ‘தாஸிம் பீவி அப்துல்காதர்’ மகளிர் கல்லூரியைத் தோற்றுவித்து, பெண் உயர் கல்விக்கு வழி வகுத்துள்ளார். அன்னார் உருவாக்கிய நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று மகளிர்க்கானவை என்பதிலிருந்து இவர் பெண் கல்வியில் கொண்டுள்ள பேரார்வம் எத்தகைய தென்பது புலனாகும்.
ஆதரவற்ற ஏழை எளிய இளஞ்சிறார்களைத் தாயுள்ளத்தோடு அரவனைத்துப் பேணிப் பாதுக்காத்து, அவர்களை வாழ்வின் உயர்நிலைக்குத் தயார் செய்ய ‘அல்அமீன்’ என்ற பெயரில் நான்கு சிறுவர் இல்லங்களையும் இரண்டு சிறுமியர் இல்லங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.
சமுதாயக் கல்வியோடு மார்க்கக் கல்வி வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வரும் இப்பெருந்தகை ‘புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி’யை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். சொல்லப் போனால், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இவர் உதவி பெறாத அரபுக் கல்லூரிகளோ, மதராசாக்களோ இல்லையென்றே கூறலாம்.
மனநலம் நாடும் கல்வித்துறை போன்றே மக்கள் உடல் நலம் பேணும் மருத்துவத் துறையிலும் பேரார்வமிக்கவர் இப்பெருந்தகை. இதற்கு கட்டியங்கூறுவன கிழக்கரை ‘யூசுப் சுலைஹா மருத்துவமனை’யும் மதுரை ‘கிரஸென்ட் மருத்துவமனை’யும் அதோடு இணைந்த ‘செவிலியர் பயிற்சிக் கல்லூரி’யும்.
அன்று தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்கட்கு நிழல் தரும் குளிர் தருவாக விளங்கிய வள்ளல் சீதக்காதி போன்றே இன்று தமிழார்வலர்கட்கும் தமிழ்ப் படைப்பாளர்கட்கும் இளைப்பாறக் கிடைத்த இனிய தருவாக விளங்குகிறார். ‘இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்’ அமைத்து இஸ்லாமிய இலக்கியப் பண்பாட்டுக்கு வழிகோலியுள்ளார். தமிழ்ப் படைப்பையும்

படைப்பாசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு சதக்கத்துல்லா அப்பா பெயரில் பரிசளித்துப் பாராட்டி மகிழ்கிறார்.
சிறப்புமிகு இச்செயல்கள் அனைத்தும் தம்மோடு நின்று விடக் கூடாது, என்றென்றுமாக நடைபெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, ஐக்கியப் பொருளாதாரப் பேரவை டிரஸ்ட், அனைத்திந்திய ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கூட்டமைப்பு முதலான அறக் கட்டளைகளை நிறுவி, அவற்றின் அறங்காவலராகவும் அமைந்து தொண்டாற்றி வருகிறார்.
இவரது கல்விப் பணியாயினும் தமிழ்ப் பணியாயினும் அனைத்துச் சமுதாய மக்களுக்கென அமைந்து வருவது, இவரது சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவதாகும்.
இத்தகு பெருமைமிகு பெரும் பணியைத் தளராது நாளும் ஆற்றி வரும் அன்னாரின் சமுதாயத் தொண்டு இன்று அவரொத்த பலரையும் ஊக்கி வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுநெறிகளாகக் கொண்டுச் செல்லத் தக்கவையாகும்.
உமறுப் புலவரின் சீறாப்புராணம் மூலம் வள்ளல் சீதக்காதி வாழ்ந்து கொண்டிருப்பதுபோல் புரவலர் பெருந்தகை, பவழ விழாச் செல்வர் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இப்பேரகராதி மூலம் காலமெல்லாம் வாழ்வார் என்பது திண்ணம்.
இவரது அளப்பரிய பணி கண்டு வியந்து நிற்கும் நான், எனது அரும் படைப்பான இக் கணினி களஞ்சியப் பேரகராதி பெருநூல் மூலம் பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் தொண்டும் சிந்தனையும் என்றென்றும் நிலைபெற அன்னாரின் அருந்தொண்டுக்கு இந்நூலை நினைவுக் காணிக்கையாக்குகிறேன்.
அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியர்
நூலாசிரியர் திரு. மணவை முஸ்தபா-புரவலர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான்.