/ வரலாற்று … /
  1. லவாய்ஸியர் …

69. லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை)

69. லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை)

2011-07-04T13:34:00.001+08:00

1794 ஆம் ஆண்டு ஃபிரெஞ்சு ரெவூல்யூசன் எனப்படும் ஃபிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது ஃபிரான்ஸின் ஆட்சிப் பொருப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ந்தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரும் இருந்தார்.

மனுகுலத்திற்கு அவர் செய்த பங்களிப்பிற்கு ஆயிரம் உயிர்களைக்கூட பரிசாகத் தந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்ற போர்வை கண்களை மறைக்க, அவரை மட்டுமாவது விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கைகளையும் நிராகரித்து அவரது உயிரை பறித்தது புரட்சி அரசாங்கம். அப்படி 51 வயதிலேயே அநியாயமாக உயிர் துறந்த அந்த அறிவியல் மேதையின் பெயர் Antoine Laurent Lavoisier. நவீன இரசாயனவியலின் தந்தை’ என்று அவரை போற்றுகிறது வரலாறு. 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ந்தேதி பாரிஸில் பிறந்தார் லவாய்ஸியர். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்ஸியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக இரசாயனவியலில் அதிக ஆர்வம் காட்டினார்.

1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று லவாய்ஸியர் கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ட்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர் சோதனைகள் மூலம் நிருபித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இரசாயனவியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கினைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. உதாரணத்திற்கு காற்றும் தண்ணீரும் கம்பவுண்ட்ஸ்(compounds) எனப்படும் கூட்டுப்பொருள்கள் என்பது இப்போது நமக்கு தெரியும். ஆனால் லவாய்ஸியரின் வருகைக்கு முன் அவை Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் ப்ளோஜிஸ்டான் எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால இரசாயனவியலார் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் லவாய்சியர். ப்ளோஜிஸ்டான் என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிருபித்தார். இரசாயனக் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை லவாய்ஸியர் கண்டு சொன்னார்.

நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள பிராணவாயுதான் லவாய்ஸியர் கண்டறிந்தார். ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார். இவையெல்லாம் நமக்கு இப்போது தெரியும் உண்மைகள். ஆனால் லவாய்ஸியர் கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. லவாய்ஸியரின் கண்டுபிடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. லவாய்ஸியர் தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த இரசாயனவியலார்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூறவும், தற்காக்கவும் தயங்கவில்லை லவாய்ஸியர்.

1789 ஆம் ஆண்டில் லவாய்ஸியர் Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். நவீன இரசாயனவியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். அதனை படித்த இளைய இரசாயனவியலார் லவாய்ஸியரின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக லவாய்ஸியர் கண்டு சொன்ன பெரும்பாலான இரசாயனப்பொருட்கள் இன்றைய நவீன இரசாயனவியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்ஸியர் அடுத்து இராசயனவியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் இராசயனவியலுக்கு ஓர் ஒருங்கினைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

உலகம் முழுவதிலும் உள்ள இராசயனவியலார்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இராசயவியல் துறையும் துரிதமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் லவாய்ஸியர். உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் ஸ்லோ கம்பாஷன் (Slow ) அதாவது மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று லவாய்ஸியர் கண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுப்பிடித்த வில்லியம் ஹாபியின் கண்டுப்பிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

பிரான்ஸ் முழுவதும் Weights & Measurements எனப்படும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் லவாய்ஸியர் முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்ஸியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். Firm General என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராக பணியாற்றியதுபோது அந்த அமைப்பு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் ஈடுபாடுதான் அவருக்கு எமனாக அமைந்தது என்று ஒரு குறிப்பு கூறுகிறது. புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் Firm General அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த 28 பேர்தான் புரட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கிளெட்டின் மூலம் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

லவாய்ஸியர் நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார். அந்த அபத்தமான செயலால் ஒரு மிகச்சிறந்த மாமேதையை இழந்தது உலகம். அந்த மேதையின் தலையை துண்டிக்க ஒரு வினாடிதான் ஆனது. ஆனால் ஒரு நூற்றாண்டு வந்தாலும் லவாய்ஸியரைப்போன்று இன்னொரு மேதையை பெற முடியாது என்று அவரது நண்பரும் சிறந்த கணக்கியலாருமான லெக்ரென்ஞ் அப்போது கூறினார். உண்மைதான் வரலாற்றின் கருப்புப்பக்கங்களில் ஒன்று லவாய்ஸியர் சிரச்சேதம் செய்யப்பட்ட சம்பவம். புரட்சியாளர்கள் அவரைக் கொன்றாலும் அறிவியலும், வரலாறும் லவாய்ஸியருக்கு சாகா வரத்தை தந்துள்ளன. இன்று Chemistry எனப்படும் இராசயனவியலை விரும்பி படிப்பவர்கள் லவாய்ஸியருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவாய்ஸியருக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான். இதே பண்புகளோடு நாமும் செயல்பட்டால் வானத்தை வசப்படுத்த நமக்கும் உதவும்.

- இணைந்திருங்கள் தொடர்ந்து வரலாறு பேசும்…..

(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)



_* _பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.__ *

_* __வாழ்க வளமுடன்_ *

என்றும் நட்புடன்

_* _ **மாணவன் *_ _**

அடுத்த பக்கம்