loading

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்

பதிவுற்ற நாள் 11 Feb 2018 |

இப்பதிவு அறவாழித்தமிழ் என்னும் தளத்தில் இருந்து எடுத்து ஆளப்படுகிறது.

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

வீரமாமுனிவர்.

தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார். ​ ஆறுமுக நாவலர் தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.

உ.வே.சா., தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார். சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.

சோழவந்தான் அரசஞ் சண்முகனார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் ‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார். பரிதிமாற் கலைஞர்எனும் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903). தமிழ் மொழி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்றவர். இவர், கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர். மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். ‘துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது’ என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, ‘முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்’ எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார். தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு: ரூபவதி,கலாவதி,மான விஜயம்,தனிப்பாசுரத் தொகை,பாவலர் விருந்து,மதிவாணன்,நாடகவியல்,தமிழ் விசயங்கள்,தமிழ் மொழியின் வரலாறு,சித்திரக்கவி விளக்கம்,சூர்ப்ப நகை - புராண நாடகம். பதிப்பித்த நூல்கள்: சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898); மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898); புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899); உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901).

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய ‘பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’ பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி ‘திட்பம்’ என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். வடசொல் இல்லாத ‘சேந்தன் செந்தமிழை’ இவர் படைத்தார். இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

நா.கதிரைவேற்பிள்ளை. நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர்.

இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் ‘சுப்பிரமணிய பராக்கிரமம்’ என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:- தமிழ்ப் பேரகராதி, அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை, பழநித் தல புராண விருத்தியுரை, சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம், சிலேடை வெண்பா, யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா, கருவூர் மான்மியம் (மஹாத்மியம்), சீட்டுக் கவிகள் பல எழுதியுள்ளார்.

வ.உ.சிதம்பரனார் (1872-1936)

எண்ணி எண்ணிப் பெருமைப் படத்தக்க வகையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விடுதலை வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சி அவர்கள் வழக்கறிஞர் என்ற தொழிலோடு தமிழிலும் சிறந்தப் புலமைப் பெற்றிருந்தார்.

ஆங்கிலப் புலமைக் கொண்டதால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என பெயர்சூட்டி வெளியிட்டார். மூல நூல்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பவர்களும் அருமையை உணர்ந்து கொள்ளலாம்.

கவிதை வடிவில்: மெய்யறம்,மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை உரை வடிவில்: இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். பதிக்கப்பட்ட நூல்களாக: திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்), தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)

கட்டுரை வடிவில்: கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே,மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் எனவும்,

அது தவிர அரசியல் சொற்பொழிவாளராக, ‘எனது அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பிலும், மொழி பெயர்ப்பாளராக, ‘மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்றும், செய்தித் தாள் ஆசிரியராக, விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றினார்.

பம்மல் சம்பந்த முதலியார் (1873 - செப்டம்பர் 24, 1964).

வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.

எழுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி தமிழ் மக்களால் ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று அழைக்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே, வாடி வதங்கிப் போய் இருந்த நாடகத் துறைக்கு புத்துயிர் ஊட்டியவர் இவர். மேலை நாட்டு நாடகங்கள், வடமொழி நாடகங்களை ஆழமாகப் படித்தார். மொழிநடை மற்றும் உரையாடல்களில் வித்தியாசமான பாணியைப் பின்பற்றினார். தொடர்ந்து நாடகக் கலைக்கு தெம்பூட்டி வந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் ‘புஷ்பவல்லி’ மக்கள் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக் குவித்தார். Image result for பம்மல் சம்மந்தம்

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் ‘அமலாதித்யன்’, ‘நீ விரும்பியபடியே’, ‘மகபதி’, ‘சிம்மளநாதன்’, ‘வணிபுர வாணிகன்’ என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

சதாவதானி செய்குத்தம்பி பாவலர். முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.

சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.

தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் ‘கவிமணியின் உரைமணிகள்’ என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி… கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்…

Image result for தேசிக விநாயகம் பிள்ளை

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை. தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை.

மறைமலை அடிகள் பெற்ற தாய் தனை மக மறந்தாலும்… உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்… எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார் (1876-1950), இடையில் நிறுத்தி - ‘உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்’ என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார். தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது. சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை ‘பொது நிலைக்கழகம்’ என்றும் மாற்றிக் கொண்டார்.

மு.ராகவையங்கார் ராகவையங்கார் (1878-1960) வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர். செந்தமிழ் எனும் இதழில் ‘வீரத்தாய்மார்’ என்று எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார். ‘இருளிலேயே மூழ்கிக் கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்’ என்று பாராட்டி எழுதினார். வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார்.

சாயுபு மரைக்காயர் தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர், தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்தவர் சாயுபு மரைக்காயர் (1878-1950). இவர் அமுதகவி என்றும் அழைக்கப்பட்டார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். மனோன்மணிக் கும்மி, உபதேசக் கீர்த்தனம், மும்மணி மாலை ஆகிய நூல்கள் சாயுபு மரைக்காயரின் தமிழாற்றலை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மொழிக்கும் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் தொண்டாற்றியவர்.

இராஜாஜி சோக்ரதர், கண்ணன் காட்டிய வழி, குடிகெடுக்கும் கள், மார்க்கச அரேலியசர் உபதேச மொழிகள், ராஜாஜி குட்டிக் கதைகள், உபநிஷ பலகணி, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் ராஜாஜியின் (1878-1972) படைப்புகள். வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய இவரது நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. மகாபாரதமும்… ராமாயணமும் தமிழில் எழுதியதை, கவர்னர் ஜெனரல் பதவியை விட முக்கியமாக ராஜாஜி ஒரு முறை குறிப்பிட்டார்.விவேகானந்தர் மற்றும் பாரதியால் பாராட்டுப் பெற்றவர் ராஜாஜி. பின்னாளில் மூதறிஞர் என்று அழைக்கப்பட்டார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.,யால் ‘தமிழ்க் கப்பல்’ என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959). வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.இந்தி எதிர்ப்புத் தந்தை என்று இவரைக் குறிப்பிட்டால் மிகையில்லை. ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ ‘இந்தி தேசிய மொழியா’ என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டாய இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வெளிப்படையான கடிதம் எழுதினார்.

வ.வே.சு. ஐயர் தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர் வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார். 44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.

மகாகவி பாரதியார் மகாகவி பாரதியாரை (1882-1921) அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. தமிழ்ப் பணியையும் விடுதலைப் பணியையும் ஒன்றாக பார்த்த அவர், மொழிப்பற்றை வளர்த்தவர். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று குறுங்காவியங்களை அவர் இயற்றினார். வ.வே.சு. ஐயர் இவரது பாடல்களை அட்சரம் லட்சம் பெறுமான பாக்கள்… அவை மனதை ஈர்க்கும் மாணிக்கங்கள் என பாராட்டினார். மகாகவி பாரதியார் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியிடம் பேரார்வம் கொண்டிருந்தார். எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ் மொழி என்று மொழியின் மீது தீராப்பற்றுக் கொண்டிருந்தவர் அவர்.

திரு.வி.க., பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் திரு.வி.க., (1883-1953). யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், அவர் கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.

இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ‘‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது… சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’’ என்று பாடியவர். ‘‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்’’ என்று பாடியவர். தமிழருக்கும் விடுதலை வீரர்களுக்கும் பாடிப் பெருமை சேர்த்தவர் அவர். காவலரின் மகனாகப் பிறந்த கவிஞர், தமிழ்க் காவலராக விளங்கினார்.

கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார் கல்வெட்டுத் துறையில் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டவர் கோவைக்கிழார் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரன் செட்டியார் (1888 - 1969). சேக்கிழாரும் கல்வெட்டும், நால்வர்களும் கல்வெட்டும், கல்லும் பேசுகிறது ஆகிய கல்வெட்டாய்வு நூல்களை படைத்தார். வெளிமாநிலங்களுக்குச் சென்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்றுக்குப் புதிய தகவல்களை சேகரித்துத் தந்தவர் இவர். அறநிலையத் துறையில் ஆணையர் பொறுப்பும் வகித்தார். கோவைப் பகுதியில் இவர் பங்கேற்காத மாநாடுகளோ, அரங்கமோ அல்லது அமைப்புகளோ இல்லை என்று கூறலாம்.

அறிஞர் வ.ரா., ‘வ.ரா.,’ என்று அறியப்படும் வ.ராமசாமி அய்யங்கார் (1889-1951) மிகப் பழமையான நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்து, புதுமையான எண்ணங்களோடு வாழ்ந்தவர்.நாட்டு விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார். தமிழ் மீது கொண்ட பற்றால் பல்வேறு இதழ்களில் பணியாற்றியவர். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் மொழி பெயர்த்து, பாரதியிடம் பாராட்டுப் பெற்றவர் வ.ரா., அந்த பாரதியை ‘மகாகவி’ என நிலை நிறுத்திய பெருமை வ.ரா.,வையே சேரும்.

மாயா மேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி
சுவர்க்கத்தில் சம்பாஷணை
கற்றது குற்றமா
மழையும் புயலும்
வசந்த காலம்
வாழ்க்கை விநோதங்கள்
சின்ன சாம்பு
சுந்தரி
கலையும் கலை வளர்ச்சியும்
வ.ரா. வாசகம்
விஜயம்
ஞானவல்லி
மகாகவி பாரதியார்
வாழ்க்கைச் சித்திரம்

இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும்.

பாபநாசம் சிவன் வர்ணங்கள், கீர்த்தனைகள், தரு பதம், கண்ணிகள், திருப்புகழ், நொண்டிச்சிந்து, வழிநடைச் சிந்து என பாபநாசம் சிவன் (1890 -1973) இயற்றிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. பக்தியும் பைந்தமிழ் உணர்வும் ஒரு சேர அவரிடம் காணமுடியும். அவர் பாடல்களைக் கேட்டால் நெஞ்சம் உருகும், கண்கள் நனையும், கருத்தை உருக்கும். எழுதிப் பாடும் வல்லமை பெற்ற அவர், எழுதாமல் நினைத்த போதெல்லாம் பாடும் ஆற்றல் பெற்றவர் அவர். பஜனைகளிலும் இசைக்கச்சேரிகளிலும் அவர் பாடல்கள் ஒலித்தன. இசை அறிஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், மதுரை மணி அய்யர், லால்குடி ஜெயராமன் உள்ளிட்டோர் பாபநாசம் சிவனிடமே பாடல்களைக் கற்றுக் கொண்டனர். இவரது திரைப்படப் பாடல்கள் தமிழகத்தில் அனைத்துப் தரப்பினரையும் கவர்ந்ததாக இருந்தது.

தமிழ் வளர்த்த அறிஞர்கள் : சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ‘ஆயுட்காவியம்’ என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் ‘பாரத சக்தி’ மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிறந்த கனகசுப்புரத்தினம், மகாகவி பாரதியாரின் வழிகாட்டியாக கொண்டதால் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் (1891 - 1964). 1935 ஆம் ஆண்டு ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ என்ற இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை துவங்கினார். பகுத்தறிவு கொள்கைக்கு உரமூட்டி, மக்களின் சிந்தனைப் போக்கில் புதிய மாற்றத்தை வடிவாக்கம் செய்து கொண்டிருந்த இவரை பெரியார் ஈ.வெ.ரா., ‘தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்’ எனப் புகழ்ந்துரைத்தார். பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, ஆத்திசூடி, இருண்ட வீடு, இசையமுது உள்ளிட்ட ஒப்பற்ற நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் வளர்த்த அறிஞர் பொ.திருகூட சுந்தரம் பிள்ளை ‘புதிய பார்வையுடன் கூடிய புதிய செய்திகளை உணர்த்துவதன் மூலமே, தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் புதிய நலம் மேவச் செய்ய முடியும்’ என்ற கருத்தை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டிருந்தவர் அறிஞர் திருகூட சுந்தரம் பிள்ளை(1891 - 1969). குழந்தைகளின் சிந்தனைகளை மேம்படுத்த ‘அப்பாவும் மகனும்’, ‘கேள்வியும் பதிலும்’ ஆகிய இரு நூல்களை இயற்றினார். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பக் கட்டுப்பாடு பற்றி தமிழில் நூல் உருவாக்கிய அறிஞர் இவர் தான். மகாத்மா காந்தியை பின்பற்றிய இவர் வாழ்வு முழுவதும் ஒரு வேட்டியும், துண்டுமே உடையாக அணிந்திருந்தார். இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் போற்றிச் சிறப்பித்து 1958ஆம் ஆண்டு, சென்னை பாரதியார் சங்கம் கேடயம் வழங்கி மகிழ்ந்தது.

பெ.நா.அப்புஸ்வாமி பெங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி (1891 - 1986) என்பது அவரது முழுப்பெயர். பாரதியார் தமிழோசை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என ஆசை கொண்டார். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்றவற்றை ஆங்கில மொழியில் மொழி மாற்றம் செய்து, ‘Tamil Verse in Translation’ எனத்தலைப்பிட்டு ஒரு பெருநூல் உருவாக்கினார். இந்நூல் 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதி பதிப்பித்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892-1953). தமிழிசையில் பண்களைப் பற்றி ஆராய்வதில் விருப்பம் கொண்ட இவர், பண் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார்.ஆங்கில மொழியிலும் அறிஞராகத் திகழ்ந்தவர். சமய நம்பிக்கை, இறை பக்தி மற்றும் தமிழ்ப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். அரசு தமிழில் நடக்க வேண்டும். சட்டசபையில் தமிழில்தான் பேச வேண்டும். பொருளாதாரத்தையும் அறிவியலையும் தமிழில்தான் கற்க வேண்டும் என்று பெரிய விருப்பம் கொண்டிருந்தவர் இவர்.

சுவாமி விபுலானந்தர் இலங்கைத் தமிழர்களிடையே பாரதியாரின் பெருமைகளை பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் (1892-1949). அங்கிருந்த அடக்குமுறைகளுக்கு அச்சசமில்லாது, தமிழகத்தில் நடந்த பாராட்டு விழாக்களுக்கு வந்து செசன்றவர். திரிகோணமலை இந்துக் கல்லூரியில் பாரதி படத்தைப் பார்த்த ஒருவர் இவரிடம் கேட்டார். ‘யார் இந்த தலைப்பாக்கட்டு ஆசாமி’ என்று? அதற்கு பதில் அளித்த விபுலானந்தர், ‘தமிழனாகப் பிறந்திருந்தால், இந்த பெருங்கவிஞனைத் தெரியாமல் இருக்க முடியாது. பாரதியை அறியாதவன் தமிழன் என்று செசால்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்’ என்று கூறியவர்.இசைசத்தமிழ் பற்றி ஆய்வு செசய்த இவர், யாழ்நூல் எனும் நூலை வெளியிட்டார்.

அறிஞர் கந்தையாபிள்ளை பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப் பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட சங்க நூல்களை உரைநடையில் வழங்கியவர் இலங்கையைச் சேர்ந்த அறிஞர் கந்தையாபிள்ளை (1893-1967). சங்க நூல்களின் பாடல்களை உரைநடைகளாக்கி, படித்தவர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக வெளியிட்டவர் இவர். தமிழகம், தமிழர் யார், தமிழ் இந்தியா உள்ளிட்ட நூல்கள் மூலம் தமிழர்களின் மற்றும் தமிழின் பெருமையை அறியச் செய்தவர். தமிழைப் பேணி காப்பது தமிழரின் உயர் கடமை, உயிர்க் கடமை என்று கூறியவர்.

சாமிநாத சர்மா சாமிநாத சர்மா (1895-1978) எழுதிய நூல்கள் அனைத்தும் தேசாபிமானத்தை தழைக்கச் செய்தவை. இவருடைய எழுத்துக்களை பாரதியார் விரும்பிப் படிப்பார். ஒருமுறை இவரிடம் பாரதியார், ‘உம்முடைய எழுத்தில் உள்ள திண்மை, உமது உடலில் இல்லையே. வன்மை கொண்ட ஓர் உருவத்தை, உமது எழுத்தை வாசிக்கும் போதெல்லாம், என் மனத்துக்குள் கொண்டிருந்தேன். என் கணிப்பு உம்மை கண்டதும், சுக்குநூறாய் சிதறிப் போய்விட்டது’ என்றார்.மெலிந்த தேகமும் மென்மையாகப் பேசும் இயல்பையும் கொண்டவர் சாமிநாத சர்மா. எழுத்துத்துறை, இதழியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றில் இவரது திறனை காணலாம்.

சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மயிலை சீனி வேங்டசாமி தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீசிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும் புலவர், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980) ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி ‘யாப்பருங்கல விருத்தி’ என்னும் நூலை படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாக கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. ‘அட்டா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?’ என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர். இத்தகைய நூல்களின் பெயர்களை தொகுத்து வெளியிட நினைத்து, அதனை செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி.

‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,’ களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார். ‘கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் (1857-1947). கொழும்பு ரயில் நிலையத் தலைவராக பதவி வகித்தவர். இவர் 70 மொழிகளைக் கற்றறிந்தவர். தமிழ் மொழிச் சொற்களோடு பிற மொழிச் சொற்களை ஒப்பிட்ட அறிஞர். வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இவருக்கு நிகர் இவரே. நம் முன்னோர்களின் மொழிப்புலமையை நன்கு வெளிப்படுத்தினார். இவருடைய ஆராய்ச்சியினால் தமிழ்மொழியின் முதன்மையை உலகம் உணர்ந்து கொண்டது. தமிழ்ச்சொற் பிறப்பகராய்ச்சி எனும் இவரது நூல் உலகப் புகழ் பெற்றது. சொற்பொருளில் தமிழ் சிறந்த மொழி என்பதையும் இவர் நிரூபித்தார்.

பூரணலிங்கம் பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் மு.சு.பூரணலிங்கம் பிள்ளை (1866-1931). திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பணிபுரியும் போது பரிதிமாற்கலைஞருடன் தொடர்பு கொண்டார். பாளையங்கோட்டையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் ‘பவணந்தி முனிவர்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மறுநாள் தெரிந்து செயல்வகை எனும் திருக்குறள் தலைப்பில் தமிழிலும் உரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். இந்நூல்களை ஆங்கில அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

பா.வே.மாணிக்க நாயக்கர் பொறியியல் தமிழ் அறிஞர் என்று மாணிக்க நாயக்கரை (1871-1931) குறிப்பிடலாம். ‘தமிழ் தொல்பெருந் தனிமொழி. இவ்வுலகிலேயே தன்னிகரற்றுத் தனித்தியங்கும் பண்டைமொழி. ஹா, ஹீ என்று மூச்சைசப் பறிக்காமல் மூச்சுச் செசட்டுடன் இயங்குவது தமிழ் ஒன்றே. வலிய எழுத்தொலிகளால் மூச்சு வீணாகிறது. பிற செசால் கலப்பால் தமிழின் தூய்மை கெடுகிறது’ என்று கூறியவர். இவர் இயற்றிய தமிழ் ஒலியிலக்கணம் எனும் நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. மரநூல் எனும் தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் அறிவியல் தமிழுக்கு இவரது மிக முக்கிய கொடையாகும்.

தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளை (1883-1971) தணிகை மணி என்று அழைக்கப்பட்டவர். அருணகிரிநாதர் எழுதிய ‘திருப்புகழை’ பதிப்பித்தவர் இவரே. மயில் பாட்டு, வேல் பாட்டு, சேவல் பாட்டு, வள்ளி கல்யாண கும்மிப் பாட்டு, திருவாசக ஒளிநெறி, தேவார ஒளி நெறி, திருக்கோவையார் ஒளிநெறி, வள்ளிக்கிழவர் வாக்கு உள்ளிட்ட நூல்களை அவர் வெளியிட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரை செய்ததன் அடிப்படையில் 1969ல் தணிகை மணிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தணிகை மணியின் இல்லம் சென்று அவரது ஆராய்ச்சி நூல்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

தண்டபாணி தேசிகர் பத்மபூஷண் விருது பெற்ற முதல் தமிழ் அறிஞர் தண்டபாணி தேசிகர் (1903-1990). உ.வே.சாமிநாத அய்யரிடம் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியவர்.திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தற்போது முதல்வராக உள்ள கருணாநிதி இவரது மாணவர். தண்டபாணி தேசிகர் மறைவின் போது, கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தாய்ப்பால் தந்த அஞ்சுகம் அன்னையைப் போல், தமிழ்ப்பால் தந்த பேராசன்’ என்று குறிப்பிட்டிருந்தார். குன்றக்குடி அடிகளாரும் தண்டபாணி தேசிகரின் மாணவர் தான். திருக்குறளில் இவருக்கு இருந்த புலமையால் தமிழக அரசு இவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கிப் பாராட்டியது.

தமிழ் வளர்த்த அறிஞர்கள்… தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இசைப்பேரறிஞராகத் திகழ்ந்தவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859-1930). கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள். இவர்கள் இயற்றிய கீர்த்தனங்கள், வர்ணங்களும் தெலுங்கிலும் வடமொழியிலும் பாடப்பெற்று வந்தன. இவற்றுக்கு ஆபிரகாம் பண்டிதர் தமிழில் பாடல்களை எழுதி அவற்றுக்குத் தாமே இசையமைத்தார். மொத்தம் 96 பாடல்களை இவர் எழுதினார். சுவாமி விபுலானந்தர் ‘யாழ் நூல்’ எழுதுவதற்கு இவரது, ‘கருணாமிர்த சாகரம்’ நூல் காரணமாக அமைந்தது. 1912ல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

செல்வ கேசவராய முதலியார் திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921), தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். தமிழுக்கு கதி இருவர்… என்று கூறினார். க என்பது கம்பரையும், தி என்பது திருவள்ளுவரையும் குறிக்கின்றன. வியாகோவை, திருவள்ளுவர், தமிழ், கண்ணகி சரித்திரம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறந்த நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதற்காக பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டவர். தமிழறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவருடைய மாணவர்கள்.

உமாமகேசுவரன் பிள்ளை தஞ்சாவூருக்கு அருகே உள்ள கரந்தை என்னும் ஊரில் தமிழுக்கு சங்கம் வைத்து தமிழை வளப்படுத்தியவர்தான் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (1883-1941). சொற்பொழிவுகள் மூலம் தமிழையும், தமிழர்களின் நிலையையும் உயர்த்துதல். வேற்றுமொழி இலக்கண இலக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழின் தரத்தை பன்மடங்காக்குதல். தமிழ்ச் சங்கத்தில் படிப்போரிடையே நல்லொழுக்கங்களை வளர்த்தல் உள்ளிட்ட நல்ல விஷயங்களை இவரது கரந்தை தமிழ்ச்சங்கம் வலியுறுத்தியது. இவரது தமிழ்ப் பணிகளை ஆங்கிலேயே அரசே பாராட்டியது. பல பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர்.

வேங்கடசாமி நாட்டார் வேங்கடசாமி நாட்டார் (1884-1944) எண்ணற்ற இலக்கியங்களை இளமையிலேயே ஆர்வமுடன் கற்றதால் இவர் பிற்காலத்தில் இயற்றிய நூல்களும் கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போல் இனிமையுடையனவாய்த் திகழ்ந்தன. வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, கள்ளர் சரித்திரம், கண்ணகியின் வரலாறும், கற்பு மாண்பும், கட்டுரைத் திரட்டு, நக்கீரர் மற்றும் கபிலர். இதுதவிர இவர் உரை எழுதிய வேறு நூல்கள், தமிழ்ப்பணிகள் அளவிடமுடியாதவை.

தமிழ் வளர்த்த அறிஞர்கள்… கா. சுப்பிரமணியபிள்ளை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தனர். 1920ல் அப்போட்டியில் கலந்து கொண்ட கா.சுப்பிரமணியபிள்ளை (1888-1945) குற்றங்களின் நெறிமுறைகள் பற்றி எழுதி முதல் பரிசான ரூ.10 ஆயிரம் பெற்றார். அறிவு விளக்கம், திருநான்மறை விளக்கம், வான நூல், குற்றச்சட்டம், பதிவு விதி, இந்திய தண்டனை தொகுதி உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். 1934ல் துவங்கிய சென்னை மாகாண தமிழ்ச்சங்கத்துக்கு தலைவராகவும் இவர் தேர்வானார். ‘மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பம்’ என்ற இவரது நூல் மிகவும் மிகச்சிறப்பு பெற்றது.

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘தமிழத்தாத்தா’ உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியராகத் திகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876). இளமையிலேயே தமிழார்வம் கொண்டு, தமிழை கற்றுத் தெளிய எதையும் செய்யலாம் என்ற ஆவலுடன் இவர் விளங்கினார். தலபுராணங்கள் பாடுவதில் வல்லவரான இவர், கோவை, பிள்ளைத்தமிழ், அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் பாடுவதில் பெரும்புகழ் பெற்று விளங்கினார். நினைத்த அளவிலேயே விரைந்து கவிபாடும் திறமை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தனிச் சிறப்பு. இவரது புலமையை கண்டு வியந்த திருவாவடுதுறை ஆதீன மடம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு ‘மகா வித்துவான்’ என்னும் பட்டமளித்து சிறப்பித்தது.

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சசங்கம் கண்ட நற்றமிழ் வித்தகர், வள்ளல் பாண்டித்துரைத் தேவர்தம்மை நாடி வந்த தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கியும், அன்னைத் தமிழின் மேன்மைக்கெனப் பெரும்பொருள் வழங்கி தனியொருவராய் நின்று நான்காம் தமிழ்ச்சசங்கம் ஏற்படுத்திய பெருமைக்கு உரியவர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர் (1867-1911). இவர் காலத்தில் வாழ்ந்த அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட் என்னும் துரை. இவர் பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தார். பிறர் கையில் பிழையான புத்தகங்கள் கிடைக்கக்கூடாது என்பதே பாண்டித்துரைத் தேவரின் எண்ணமாக இருந்தது. தமிழன் எவ்வகையிலும் தாழக்கூடாது என்ற நினைப்பு கொண்டவர் பாண்டித்துரைத் தேவர். இவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி.,யின் சுதேசிக் கப்பல் விடும், பெரும் பணிக்குத் தனியொருவராகவே ஒன்றரை லட்சசம் பணத்தை அள்ளி வழங்கியவர்.

தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார் எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதி தொண்டு புரிந்தவர், கா.நமச்சிவாய முதலியார்(1876-1934). இவர் ‘சிறுவர்களுக்கான நூல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். சிறுவர்களுக்கான நூல் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை அந்நூல் உணர்த்தியது. தமிழறிஞர்கள் பலரும் அந்நூலை பாராட்டினர். மேலும் இவர் தொல்காப்பியம் சொல்லதிகாரம்(இளம்பூரணர் உரை), நன்னூல், தணிகைப் புராணம், குறுந்தொகை போன்ற அறிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இவர் திருவிளையாடற் புராணத்தை இனிய எளிய அழகான வசன நடையில் எழுதி சஞ்சிகைகளாக வெளியிட்டார். மேலும் இவர் தமிழ்வித்துவான் தேர்வை தொடங்கிய பெருமைக்குரியவர்.

கோவிந்தசாமி கோவிந்தசாமி (1920-2003) டில்லியில் உள்ள மதராசி மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின் அண்ணாமலை பல்கலையில் தமிழப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது திருக்குறள் நூல்களும் திறனாய்வு சம்பந்தமான இவரது நூல்களும் மிகவும் பாராட்டப்பட்டவை. திருக்குறள் மக்களிடம் பரவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். 1996ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இவருக்குக் கிடைத்தது. இவரது ஆராய்ச்சியான தமிழ் இலக்கியத்தில் வரலாற்று ஆதாரங்கள் அவரது முனைவர் பட்டத்துக்கே பெருமை சேர்த்தது.

அண்ணாமலை செட்டியார் சிவ பக்தியையும், தமிழ்ப்பணியையும் தமது இரு கண்களாகக் கருதியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் (1881-1948). தனியொருவராய் நின்று இயல் தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும், இசைத் தமிழ் வளர்ச்சிக்காகப் தமிழிசைச் சங்கமும் கண்ட பெருமைக்குரியவர். இவரின் வாழ்வு நகமும், சதையும் போலத் தமிழோடு பின்னிப் பிணைந்தது. பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென விரும்பினார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த சென்னைப் பல்கலையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தர வேண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 1929ம் ஆண்டு நிறுவினார். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் அண்ணாமலை செட்டியாரின் காலத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு 1943ம் ஆண்டு ‘தமிழிசைச் சங்கம்’ என்னும் அமைப்பினை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் இவரே விளங்கினார். அண்ணாமலை செட்டியாரின் கொடை வன்மையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு ‘சர்’ என்னும் பட்டத்தை வழங்கியது.

கி.ஆ.பெ.விசுவநாதனார் இந்தியை கட்டாய பாடமாகத் திணிக்க, அரசு முயன்ற போது அதனைத் தகர்த்தெறிய முன்னணியில் நின்றவர் கி.ஆ.பெ.விசுவநாதனார் (1899-1994). திருக்குறள் மேல் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு. திருக்குறள் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நூல் என்பதில் ஆணித்தரமான கருத்துடையவர். தமிழின் சிறப்பு, தமிழ்செசல்வம், திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள், திருக்குறளில் செசயல்திறன், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘தமிழர் புலவர் குழு’ என்ற குழுவை தோற்றுவித்த பெருமைக்குரியவர். தற்பொழுது விசுவநாதனாரின் புதல்வி திருமதி மணிமேகலை கண்ணன் இப்புலவர் குழுவை திருச்சியில் நடத்தி வருகிறார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சசங்கம் இவருக்கு ‘முத்தமிழ்க் காவலர்’ என்னும் விருது வழங்கி பாராட்டியது.

ஞா.தேவநேயப் பாவாணர் தமிழன்னையின் கண்களில் வழிந்த அவலக் கண்ணீரை தமது எழுத்து வன்மையாலும், வலுவான இலக்கியச் சசான்றுகளாலும் துடைத்தெறிந்தவர் தமிழ்ப் பெரியவர் தேவநேயப் பாவாணர் (1902-1981). தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை, தொல்காப்பியம் செசால்லதிகாரம் குறிப்புரை, ஒப்பியன்மொழி நூல், பழத்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். சேசலம் தமிழ்ப்பேரவை 1955ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், பாவாணரின் அருந்தமிழ்த் தொண்டைப் பாராட்டி ‘திராவிட மொழி நூல் ஞாயிறு’ என்னும் பட்டமும், வெள்ளித் தட்டமும் வழங்கிப் பாராட்டியது. மேலும் தமிழக அரசு இவருக்கு, 1979ம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் ‘செசந்தமிழ்ச் செசல்வர்’ என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.

அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு தெளிவான உரை எழுதி தமிழக மக்களால் நினைக்கப்படுபவர் துரைசாமிப் பிள்ளை (1903-1981). துரைசாமிப் பிள்ளை அவர்கள் கம்பீரமான தோற்றமும், கணீரென்ற குரல் வளமும் கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழ்ப்பற்றும், சைவப்பற்றும் இவருடைய இரு கண்களாகத் திகழ்ந்தன. தமிழ்த் தாமரை, சைவத் திறவு, கோமகள் கண்ணகி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் இயற்றிய ‘சைவ இலக்கிய வரலாறு’ என்னும் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகமே வெளியிட்டுள்ளது. இவருடைய உரைப்பணியையும், சைவப்பற்றையும் கண்ட, தமிழறிஞர்கள் இவரை ‘உரை வேந்தர்’ என்றும், ‘சித்தாந்த கலாநிதி’ என்றும் அழைத்தனர்.

சாமி சிதம்பரனார் குறுந்தொகை என்னும் சங்க இலக்கிய நூலைக் கற்று மிக இனிய ‘குறுந்தொகைப் பெருஞ்செல்வம்’ என்னும் அரிய ஆய்வு நூலைப் படைத்தவர் சாமி சிதம்பரனார் (1900-1961). இந்நூல் சாமி சிதம்பரனாரின் ஆழ்ந்த புலமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது.தொல்காப்பியத் தமிழர், சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம், இலக்கியம் என்றால் என்ன?, பண்டைத் தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், அணைந்த விளக்கு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் மூழ்கிவிட்ட சாமி சிதம்பரனார் பதினாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்திலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த 3,949 பாடல்களைத் தேர்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் மயிலை சிவமுத்து பேராசிரியர் மயிலை சிவமுத்து கருதிச் செய்த மாபெரும் பணிகள், மாணவர் உலகுக்கு மகத்தான பயன்களை வழங்கின. சொல்லப்போனால், தமிழ் மொழியின் வளமான வளர்ச்சிக்கும், தமிழர்களின் நலமான எழுச்சிக்கும் இந்தப் பணிகளே அடிப்படையானவை, அவசியமானவை என இவர் நம்பினார். பேராசிரியர் எழுதிய ‘தங்கநாணயம்’, ‘ ஒரு சந்நியாசியின் இளமைப்பருவம்’, ‘சிவஞானம்’, ‘நாராயணன்’, ‘நல்ல குழந்தை’ போன்ற நூல்கள் மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 1959ம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம், இவருக்கு கேடயம் அளித்து கவுரவித்தது. அந்த ஆண்டிலேயே, குழந்தை இலக்கியச் சேவைக்காக, மத்திய அரசும் பரிசு வழங்கிப் பாராட்டியது.

சதாசிவப் பண்டாரத்தார் தமது ஆயுட்காலம் முழுவதையும் தமிழ்ப்பணிக்கென்றே அர்ப்பணித்துப் புகழ் பெற்றவர் தமிழறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். இவர் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள சொத்துக்கள் மிகவும் அரியவை; மிகவும் வித்தியாசமானவை. இவர், தமிழர் வரலாற்றை தமிழிலேயே அறிந்து கொள்ள வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் இயற்றிய ‘முதற்குலோத்துங்க சோழன்’, ‘பாண்டியர் வரலாறு’, ‘திருப்புறம்பியத் தல வரலாறு’, ‘காவிரிப்பூம்பட்டினம்’, ஆகிய வரலாற்றுத் திருநூல்கள் அறிஞரின் ஆர்வத்தாலும், தளர்வறியா உழைப்பாலும் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பான நூல்கள்.

பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி 1892ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ‘பூதலப்பட்டு’ எனும் சிற்றூரில் பிறந்தார். திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை கருத்து மாறாமல் தெலுங்கில் மொழி பெயர்த்த பெருமை ஸ்ரீராமுலு ரெட்டியை சேரும். இது மட்டுமல்லாமல் பாரதியாரின் பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆந்திர மாநில அரசு அவரை மதித்துப் பாராட்டி ‘வித்வக்குலத் திலகம்’ எனும் விருதளித்துப் பெருமைப் படுத்தியது. சித்தூர் சாரதா பீடம் அப்பேரறிஞருக்கு ‘சாகித்ய ரத்னாகரம்’ எனும் பட்டமளித்தது.

அறிஞர் சொ.முருகப்பா காரைக்குடியை சேர்ந்த சி.சொ.சொக்கலிங்கம் செட்டியார் - விசாலாட்சி தம்பதியினருக்கு 1893ஆம்ஆண்டு மகனாகப் பிறந்தார் முருகப்பா. தமிழுக்கும், தமிழ் நாட்டாருக்கும் ஊட்டம் அளிக்கும் நோக்கத்துடன் ‘குமரன்’ என்னும் மாதப் பத்திரிகையை 1923ஆம் ஆண்டு துவங்கி வெளியிட்டார். சுயமரியாதை இயக்கத்திற்கு வல்லமை சேர்க்க ‘சண்ட மாருதம்’ என்னும் தினசரியைத் திருச்சியில் துவங்கினார் இவர். முருகப்பா தொடங்கிய ‘குமரன்’, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் முதற் கவிதைக்கு இடமளித்து, பின் அவருடைய கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டு, கவிமணியைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்து பெருமை பெற்றது.

பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூக ரெங்கபுரத்தில் 1893ஆம் ஆண்டு வேங்கடாசல ரெட்டியாருக்கும், லட்சுமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் வேங்கடராஜூலு. இவருடைய பெற்றோர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்த பெயர் சூட்டினர். பன்மொழிப் புலமை பெற்றிருந்த இவர், மொழி ஒப்பீட்டு ஆய்வில், உ.வே.சா., தமிழ் அறிஞர் கா.நமச்சிவாய முதலியார் ஆகிய அறிஞர்களின் போற்றுதலைப் பெற்று, அவர்களின் துணையால் தமிழாசிரியராகப் பணியில் அமர்ந்தார். அறிஞர் வேங்கடராஜூலு ரெட்டியார், சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக ‘கபிலர்’ வரலாற்று நூலை 1936ஆம் ஆண்டு வெளியிட்டார்.

ந.சி.கந்தையாபிள்ளை இலங்கையில் கந்தரோடை என்னுமிடத்தில் நன்னியர் சின்னத் தம்பியின் புதல்வராகப் பிறந்தார் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893 - 1967). பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப் பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்கநூல்கள் பலவற்றை வசன நடையில் எழுதிய இவர் இலங்கைத் தமிழறிஞராவார். ‘தமிழ் ஆராய்ச்சி’, ‘தமிழ் விளக்கம்’, ‘முச்சங்கம்’, ‘ நமதுநாடு’, ‘திராவிடம் என்றால் என்னஉ’, ‘நமது நாடு’, ‘ தமிழர் சமயம் எது?’, முதலிய ஆராய்ச்சி நூல்கள் அப்பெருந்தகையின் அறிவூட்டத்தையும், ஆய்வு நாட்டத்தையும் தெளிவுபடுத்தின. ‘அறிவுரைக்கோவை’,’ அறிவுரை மாலை’, ‘பொருளுரைக் கொத்து’ ஆகிய நூல்கள் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தன.

பண்டிதர் அருணகிரிநாதர் எழுத்தாற்றலும், கற்பனையாற்றலும் மிகுந்த நாவல் ஆசிரியராக திகழ்ந்த அருணகிரிநாதர் (1895 - 1974) எழுதிய ‘குமுதரஞ்சனி’,’ அமிர்தசாகரன்’,’ அமிர்த குமாரி’,’சற்குணவல்லி’,’பத்மாசனி’,’திருக்கழுக்குன்றத்துக் கொலை’ ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழாசிரியர் பொறுப்பையே விட்டுவிட்டு புதினங்களைப் படைப்பதில் நாளும் ஈடுபட்டார் இவர். வரலாற்று நூல்கள் படைப்பதிலும் சாதனை படைத்தார் அருணகிரிநாதர். ‘புத்தர்’, ‘அசோகர்’, ‘அயல்நாட்டுப் பெரியோர்’, ‘சேம்ஸ் கார்ல்பீல்டு’, ‘ வில்லியம் மில்லர்’ ஆகிய நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. இவருடைய கவியாற்றலை ‘வடபழநியாண்டவர் அந்தாதி’ தமிழுலகிற்கு தெளிவுபடுத்தியது.

அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இளமைக் காலம் முதலாகவே, திருக்குறளை மிகுந்த வேட்கையோடும், நிறைந்த ஈடுபாட்டோடும் பயின்று வந்த சேதுப்பிள்ளை (1896 - 1961), ‘இல்லை உலகில் இது போலொரு நூல்’ என வியந்தார். அதன் வெளிப்பாடே ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எனும் திருநூலை உருவாக்கம் செய்து, தமிழின் பெருமையை எடுத்துரைப்பதாகியது. அறிஞர் சேதுப்பிள்ளை தமிழில் படைத்தளித்த உரைநடை நூல்கள் பதினேழு. அவற்றிற்குள்ளே சேதுப்பிள்ளையின் புகழைப் பெரிதும் ஓங்கச் செய்த ‘தமிழகம் - ஊரும் பேரும்’ என்ற ஆய்வுப் பெருநூல், செந்தமிழுக்குச் சிறந்த சொத்தானது. சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் திறமறிந்த பேரறிஞர் கா.சு.பிள்ளை, இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணியாற்ற உதவினார்.

அ.சிதம்பரநாதனார் தமிழின் சுவையை மற்றவர்களுக்குப் புலப்படுத்த முயன்ற தமிழறிஞர்களில் சிதம்பரநாதனாரும் (1907-1965) ஒருவர். இவர் 1928ம் ஆண்டு பி.ஏ., தேர்வெழுதி மாநிலத்திலேயே முதன்மையாகத் தேறினார். குறிப்பாக தமிழில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றமைக்காக ஜி.யூ.போப் தங்கப் பதக்கமும், பிராங்ளின் கெல் தங்கப் பதக்கமும் பரிசசாகப் பெற்றார். சிதம்பரனார் தமிழோசைச, முன்பனிக்காலம், இளங்கோவின் இன்கவி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், உழைப்பால் உயர்ந்த ஒருவர் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றியதற்காக தருமபுர ஆதீனம் சிதம்பரநாதனாருக்கு ‘செசந்தமிழ்ச் செசல்வர்’ என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.

அறிஞர் அண்ணா: காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். சென்னை மாகாணம் என்ற நிலையை மாற்றி தமிழ் நாடு என்று பெயர் சூட்டினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்று, எழுத்திலும் பேச்சிலும் தனக்கேயுரிய பாணியைப் பின்பற்றி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். இவர் எழுதிய நூல்கள்.சிறுகதைகள்

இரும்பு முள்வேலி
சொல்லாதது
காமக் குரங்கு
தீர்ப்பளியுங்கள்
சுடுமூஞ்சி
'கொக்கரகோ'

புதினங்கள்

ரங்கோன் ராதா

கட்டுரை நூல்கள்

வெள்ளை மாளிகையில்

கலைஞர் கருணாநிதி: முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, பிறப்பு: சூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். அந்தக் கலைஞர் என்ற பட்டமே அவருக்கு பெயராக உள்ளது. தமிழ் மொழியைப் பற்றி இந்திய அரசிடம் எடுத்து சொல்லி,அதனை செம்மொழிப் பட்டியலில் சேர்த்தவர். இவர் எழுதிய நூல்கள்:

குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பதோடு மட்டுமில்லாது, கணினித்துறையில் தமிழ் மொழி வளர்வதற்கு காரணமாகத் திகழ்பவர்.