/ புறநானூறு / 001: இறைவனின் …

001: இறைவனின் திருவுள்ளம்!

பாடியவர்: பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன்

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 5

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
 
தலையில் கொன்றைப் பூ சூடியவன்.மார்பில் கொன்றை-மாலை அணிந்தவன்.ஊர்தி வெண்ணிறக் காளைமாடு.கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர்.தொண்டையில் நஞ்சுக் கறை.
அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது.ஒருபாதி (இடப்புறம்) பெண்-உருவம்.அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு.நெற்றியில் பிறை.
அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும்.அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன்.
நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன்.தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை.இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.