/ புறநானூறு / 112: உடையேம் …

112: உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல்
துறை: கையறு நிலை

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 5

பாரிமகளிர் (பாரியின் பெண்மக்கள்) பாடுகின்றனர். இன்று முழுநிலா. இது போன்ற கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். இன்று இல்லை. எம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்தது. எம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.