/ Tamil Pulvarkal / காவிரிப்பூம்பட் …

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

    • இப்பெயர் காரிக் கண்ணனாரெனவும் வழங்கும்; இவருக்கு இப்பெயர் உறுப்பான் வந்தது போலும்; காரி - கரிக்குருவி. இவர் வணிகர்; இதனை, “ஊரும்பேரும்” (தொல். மரபு. சூ. 74, பேர்.) என்பதன் விசேடவுரையால் உணர்க; இவர் வாக்கிற் காவிரி கடலொடு கலக்கும் சங்கமுகத்துறை கூறப்பெற்றுள்ளது (அகநா. 123) . பாண்டியனுக்குத் திருமாலையும் அப்பாண்டியனும் சோழனும் ஒருங்கிருந்தபொழுது அவர்களுக்குக் கண்ணன் பலதேவரிருவரையும் உவமை கூறியிருத்தலின், இவர் திருமாலடியவராகக் கருதப்படுகின்றனர். மேற்கூறிய அரசருக்கு ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று இவர் கூறும் பகுதியும், பிறவும் இன்பத்தைத் தருவன. அயனே திருவள்ளுவராக வந்து திருக்குறளைத் தந்தானென்றதனால், அந்நூலின்பால் இவர்க்குள்ள நன்மதிப்பு வெளியாகும். இவராற் பாடப்பட்டோர் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்ற னென்பார். இவரியற்றிய பாடல்கள் - 9 : அகநா. 2; குறுந். 1; திருவள். 1; புறநா. 5.