/ Tamil Pulvarkal / ஒல்லையூர்தந்த …

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

    • புதுக்கோட்டை ஸமஸ்தானத்திலுள்ள ஒலியமங்கலமென்னும் ஊரிலுள்ள சாஸனத்தால் ஒல்லையூரென்பது அவ்வூரென்று தெரிகின்றது. தென்னாட்டிலுள்ள பூதப்பாண்டியென்னுமோரூர் பண்டைக்காலத்தில் இவன்பெயரால் அமைக்கப் பெற்றதுபோலும். போர்க்களத்தில் இவன் கூறிய வஞ்சினவகைகள் அறியற்பாலன; போரில் வல்லவன்; செய்யுள் செய்தலிலும் திறமையுடையோன்; இதனை இவன் பாடிய பாடல் புலப்படுத்தும்; இவன் பெயர் பூதபாண்டியனெனவும் வழங்கும்; இவன் நட்பினர் ; மையலென்னும் ஊரிலுள்ள மாவன், எயிலென்னும் ஊரிலுள்ளானாகிய ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்னும் இவர்கள். இவன் மனைவி இவன் இறந்தவுடனே தீயிற் பாய்ந்து இறந்தாள். இவன் இயற்றிய பாடல்கள் - 4; அகநா. 1; புறநா. 3.