/ Tamil Pulvarkal / வடமவண்ணக்கன் …

வடமவண்ணக்கன் தாமோதரனார்

    • வண்ணக்கன் - நாணய பரிசோதகன்; இப்பொருள் நீலகேசியுரையிற் கண்டது. நோட்டக்கார னென்னும் பெயர் இப்பொருளில் இக்காலத்து வழங்கப்படுகின்றது. தாமோதரனாரென்பது கடவுள்பெயரால்வந்த இவரது இயற்பெயர். இவர் வடதிசையிலிருந்து வந்தவராக எண்ணப்படுகிறார். இவராற் பாடப்பட்டோன் பிட்டங்கொற்றனென்பான்.

வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்

  • இவராற் பாடப்பட்டோன் தேர்வண்மலையன். அவனை நோக்கி இவர், “உழுத நோன்பகடழிதின்றாங்கு, நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே” என்கிறார்; அழி - வைக்கோல். இப்பெயர் வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாரெனவும் வழங்கும்.

வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்

  • “தெண்கடல், முழங்கு திரை முழவின் பாணியிற் பைபயப், பழம்புண் ணுறுநரிற் பரவையினாலும்” (நற். 378) எனக் கடலலையின் ஒலிக்கு முழவின் ஒலியை உவமங் கூறிய சிறப்பால் இவர் பெயர்க்குமுன் ‘பேரி’ என்னும் அடை கொடுக்கப்பட்டது போலும். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனென்பான். அவனை நோக்கி, ‘நீயும் நின்புதல்வரும் நீடுவாழ்க’ என்று கூறும்பகுதி மிக்க நயமுடையது. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் காணப்படுகின்றன; அகநா. குறுந். நற்.